நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Saturday, August 18, 2012

ரா. கி. ரங்கராஜன் மறைவு

ரா. கி. ரங்கராஜன் (பி. 1927) ஒரு  பிரபலமான தமிழக எழுத்தாளர் மற்றும் இதழாளர். வரலாற்றுப் புதினங்கள், குற்றக் கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என பல பாணிகளில் பல நூலகளை எழுதியுள்ளார்.

ரங்கராஜன் கும்பகோணத்தில் பிறந்தார். இவரது தந்தை ஆர். வி. கிருஷ்ணமாச்சாரி ஒரு சமசுகிருதப் பண்டிதர். சக்தி, காலச் சக்கரம், கல்கண்டு போன்ற இதழ்களில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய ரங்கராஜன், 1947 முதல் 42 ஆண்டுகள் குமுதம் இதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். இவர் பல புனைப்பெயர்களில் எழுதியுள்ளார். சூர்யா, ஹம்சா, துரைசாமி, கிருஷ்ணகுமார், மாலதி, வினோத் ஆகியவை அவற்றுள் சில. நான் கிருஷ்ணதேவராயன் இவரது குறிப்பிடத்தக்க வரலாற்றுப் புதினம். ஹென்றி ஷாரியரின் பாப்பிலான் (பட்டாம்பூச்சி), சிட்னி ஷெல்டனின் இஃப் டுமாரோ கம்ஸ் (தாரகை), தி ஸ்டார்ஸ் ஷைன் டவுன் (லாரா) மற்றும் ரேஜ் ஆஃப் ஏஞ்சலஸ் (ஜெனிஃபர்); ஜெஃபிரே ஆர்ச்சரின் எ டுவிஸ்ட் இன் தி டேல் (டுவிஸ்ட் கதைகள்) டேனியேல் ஸ்டீலின் காதல் மேல் ஆணை ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள். கிருஷ்ணகுமார் என்ற பெயரில் அமானுஷ்ய  கதைகளும் , டி. துரைசாமி என்ற பெயரில் உண்மைக் குற்றங்களின் அடிப்படையில் குற்றக் கதைகள், வினோத் என்ற பெயரில் தமிழ்த் திரைப்பட செய்திக் கட்டுரைகள் (லைட்ஸ் ஆன் வினோத்) என பலவித படைப்புகளை எழுதியுள்ளார். இவற்றுள் பல குமுதம் ஆனந்த விகடன் முதலான இதழ்களில் தொடர்களாக வெளிவந்தன.
தேர்ந்தெடுக்கப்பட்டவை “நாலு மூலை” என்ற பெயரில் நூலாக வெளியாகியுள்ளன. ”அவன்” என்ற பெயரில் தன் வரலாற்றையும் எழுதியுள்ளார்.


Tuesday, July 24, 2012

சென்னைக்கு வாருங்கள் பதிவர்களே! - தூரிகையின் தூறல்

சென்னைக்கு வாருங்கள் பதிவர்களே! - தூரிகையின் தூறல் Ignore warning

வணக்கம் தோழர்களே..சென்னையில் பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதை தாங்கள் அறிவீர்கள்..அதற்கான முதற்கட்ட வேலையாக நிகழ்ச்சி நிரலை ஒன்று கூடி பேசி தீர்மானித்து தயாரித்திருக்கிறோம்.
       இச்சந்திப்பு ஆரோக்கியமானதாக இருக்குமா என சில பதிவர்களின் மனதில் சந்தேகம் இருக்கிறது.அதைப் போக்க முற்றிலும் பதிவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் கவியரங்கம்,கருத்தரங்கம் என  சந்திப்பை பயனுள்ளதாக நடத்த முயற்சித்து வருகிறோம்.
       நிறைய தோழர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கவியரங்கத்தில் பங்கொள்ள ஆர்வமாயிருக்கிறேன் என சொல்லி அதற்கு தயாராகி வருவது மகிழ்ச்சியைத் தருகிறது .பதிவர்களுக்கு பயனுள்ள சந்திப்பாய் இருக்கும் அனைத்து பதிவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிப்போம்..நன்றி..

                                   நிகழ்ச்சி நிரல்


Wednesday, July 11, 2012

மூன்றாம் உலகப் போர்

varum 13/07/2012 முதல் வைரமுத்துவின் 
   மூன்றாம் உலகப் போர்

5-க்கும் மேற்பட்ட பிரதிகளை முன்பதிவு செய்து 12% கழிவினைப் பெறுங்கள்!

Tuesday, May 15, 2012

சென்னை யூத் பதிவர் சந்திப்பு – எனது (வேடியப்பன்)  துவக்க உரை





சென்னையில் பதிவர் சந்திப்பு என்றால் அது பெரும்பாலும் டிஸ்கவரி புக்  பேலஸில்தான் நடக்கும். இதுவரை ஒரு முறை கூட நில அபகரிப்பு கேஸ் போடாமல் நமக்கு இடம் அளித்து வரும் உரிமையாளர் வேடியப்பன் அவர்களுக்கு மிக்க நன்றி. வரும் மே 20 ஆம் தேதி ஞாயிறு அன்று டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறவுள்ள சென்னை யூத் பதிவர் சந்திப்பின் முன்னோட்டமாக வேடியப்பன் அவர்களின் மடல் உங்கள் பார்வைக்கு: நன்றி.  மெட்ராஸ் பவன்

                                                                     
   மீண்டும் ஒரு பதிவர் சந்திப்புக்கு தயாராகிவிட்டோம். இந்த நேரத்தில் எப்போ எங்கு எப்படி செம்புலப்பெயர் நீர்போல் பதிவர்களோடு நான் கலந்துபோனேன் என்று கண்டுபிடிக்க முடியும் என்று நம்பிக்கையில்லை. எனக்கும் பதிவர்களுக்குமான  இந்த உறவு என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று சொல்லலாம். ஆனால் ஒரு விவாசாயி பெத்த புள்ளைங்கிற முறையில எனக்கு தெரிஞ்சு எந்தப் பயிரும் ஆயிரங்காலத்துக்கு அழியாம தொடருதான்னு தெரியில. நான் சின்ன வயசுல பாத்த சாமைவரகுதினை போன்ற சத்துமிக்க பயிர் வகைகளே இப்போது காணாமல் போச்சு. சரி ஆயிரங்காலத்துப் பயிர் வேணாஆயிரங்காலத்துப் File எனலாம் என்றால் காலையில சேவ் செய்து வெச்சுட்டுப்போற பைல மதியம் வந்து ஓபன் பண்ணுனா வைரஸ் அது இதுனு காணாமப் போயிடுது. அப்போ எந்த உவமையை அடிப்படையா வெச்சு எனக்கும் பதிவர்களுக்குமான பந்தத்த விலக்க முடியும்னு நம்புறேன்னு தெரியில. யாராவது காசுகொடுத்தால் ஒரு புத்தகமாகவே போட்டு சம்பாதித்து விடுவேன். அவ்வளவு விசயம் ஒரே நேரத்தில ஞாபகத்திற்கு வருது.  



வந்த வேலையை விட்டுட்டு பந்தக்காலைப் பிடிச்சுட்டு நிக்கிறான்னு சொல்லுவாங்க. அப்படித்தான் நான் இப்போ சொல்ல வந்தத விட்டுட்டு வேற எதையோ எழுதிட்டு இருக்கேன்னு நினைச்சீங்கன்னா அதுக்கு காரணம் பதிவர்களான நீங்கதான். நீங்க கத்துக் கொடுத்ததுதான். சரி விசயத்துக்கு வரேன்.  2009 முடிவில் டிஸ்கவரி புக் பேலஸ் ஆரம்பிச்சப்பதான் எனக்கு பதிவர்கள், பிளாக்கர்ஸ்ங்கிற சொல்லே கேள்விப்பட்டேன். அப்புறம் கேபிள்ஜி எனக்கும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சுக் கொடுத்து எழுதுனு சொன்னப் பிறகுதான் சரி... ப்ளாக் எழுதிறதில இருக்கிற நல்லது கெட்டது தெரிஞ்சது. 

நான் ஒரு போஸ்ட் போட்டுட்டு, அதை படிக்கச் சொல்லி நானே போன் போட்டு சொல்லி, அப்புறம் பின்னூட்டம் வேற போட்டாகனும்னு கட்டாயப்படுத்திய காலங்களில்தான் உங்களின் சகிப்புத்தன்மையை நான் முழுதாக உணர முடிந்தது. எனக்கும் அப்போ ஆயுசு கெட்டிங்கிற சந்தோஷம். அதுக்கபுறம்தான்  சரி.. வேணா.... முதல்ல மற்றவங்க எழுதுறத நம்ம படிக்க ஆரம்பிக்கனும்னு ஒரு முடிவுக்கு வரமுடிஞ்சது.  சென்னையில இன்னைக்கு டிஸ்கவரி புக் பேலஸ்- ஒரு தவிர்க்க முடியாத புத்தக கடையா மாறி இருக்குனா அதுக்கு காரணம் நிச்சயமா பதிவர்கள்தான்னு உறுதியா சொல்வேன். வருகைத் தரும் ஒவ்வொரு பதிவர்களையும் நான் ஆவலோட எதிர்பார்ப்பேன். அவர்களோடு தொடர்ந்து நல்ல நட்பை வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். 

அதேபோல் இதுவரை எந்தப் பதிவர்களும் யாரும் தவறாக ஒரு வார்த்தை பேசி நானும் பார்த்த்தில்லை. அந்த வகையில் உண்மையில் பதிவர்கள் அன்பு என்ற கயிற்றில் ஒற்றுமையாக காயும் உப்புக்கண்டம் எனலாம். அதனால் சாதாரண இதை பதிவர் சந்திப்புனு சொல்லிட முடியாது. நமது நலம் விரும்பிகளை ஒரு நாள் நமது வீட்டுக்கு அழைப்போம் இல்லையா..அப்படியே!
   
தவிர்க்கவே முடியாத காரணத்தால்தான் மே 13.ம் தேதி நாம் டிஸ்கவரி புக் பேலஸ்-ல் பதிவர் சந்திப்பு நடத்த  முடியாமல் போனது. அதன் பிறகு கே.ஆர்.பி வேறு இடம் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லும்போது நான் முடிந்த அளவு முயற்சிக்கிறேன் என்றேன், 13 அம் தேதி அன்று புத்தக விமர்சனத்திற்கு ஏற்பாடு செய்திருந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் முடியாது என்றும், பத்திரிக்கைகளுக்கெல்லாம் தகவல் சொல்லிவிட்டோம் என்றும் சொன்னார்கள், துயரமான முடிவுகளைக் கொண்ட காதல் படங்களின் கடைசிக்காட்சியில் காதலனின் கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நழுவிப் போகும் காதலியைப் போல  கே ஆர் பியை நான் பிரிந்து விடை பெறும்போது எல்லையில்லா ஏமாற்றத்தோடு இந்தமுறை நாம் பதிவர்களை தவறவிட்டுவிட்டோம் என்று நினைத்தேன். அதோடு அதே 13.ம்தேதி நமக்கும் நிகழ்ச்சி இருப்பதால் குறைந்தபட்சம் கூட்டத்தின் ஒரு மூலையில் நின்று கைவிடப் பட்ட காதலனைப்போல ஒரு வாய் காஃபி தண்ணிகூட குடிக்கமுடியாமல் போய்விட்டதே என்று ஏங்கினேன்.  என்ன ஆச்சரியம்?  5 வருடம் கழித்து என்று டைட்டில் கார்டு போட்டு சேர்த்து வைத்து காதலைக் காப்பாற்றும் இயக்குநர்களைப் போல ஒரு வகையில் நாம் ஒரு வாரம் கழித்து சேர்ந்து இருக்கப் போகிறோம் என்று நினைக்கும் போது  நமக்கான பந்தம் ஏழேழு ஜென்மத்திற்கும் நிலையானது.. அய்யோ அம்மா..  மன்னிச்சுக்குங்க, என்னைக்கும் நிலையானது:    

தோழமையுடன்!
வேடியப்பன்.

Saturday, March 24, 2012

ஒய் திஸ் உலை வெறி!

    ஒய் திஸ் உலை வெறி? -    ஓ பக்கங்கள் -ஞாநி காட்டம்   
    ****************************

    இந்த வார கல்கியில் ( கல்கி 14.1.2012 ) மத்திய அரசின் பொய்யான பிரச்சாரம் பற்றி காட்டமாக விமர்சித்திருகிறார்.. சமீப காலமாக மீடியாக்களில் அரசின் அணு உலை ஆதரவுப்பிரச்சாரம் ஒரு எல்லையை மீறி சென்று கொண்டிருப்பதாக அவர் கூறுகிறார்..


    கூடங்குளத்தில் அணு உலை நிறுவியே தீருவோம் என்ற உலைவெறியில் இருக்கும் இந்திய அரசும் அதன் அணுசக்தித் துறையும் எதிர்பார்த்தபடியே மீடியா மூலம் பெரும் பொய்ப்பிரசாரத்தை அவிழ்த்துவிட்டிருக்கின்றன. தொலைக்காட்சிகளில் அவை போடும் விளம்பரங்களைப் பார்த்தால் அணு மின் நிலையம் இல்லாத இடங்களில்தான் புற்று நோய் அதிகம் என்றும் அணுமின் நிலையம் இருந்தால் புற்று நோய் அந்த வட்டாரத்தில் குறைந்துவிடுவதாகவும் தெரிகிறது.




    உலக அளவில் இப்படி ஒரு புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பை யாரும் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள்.




    புற்று நோய் துறையில் பிரபலமான டாக்டர் சாந்தா புற்று நோய்க்கும் கதிரியக்கத்துக்கும் தொடர்பு இல்லை என்று அரசு பிரசாரத்தில் சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது. கதிரியக்கம் எப்படி புற்று நோயை ஏற்படுத்துகிது என்று மலைமலையாகத் தகவல்கள், ஆய்வுகள் கொட்டிக் கிடக்கின்றன இணையத்தில் உலகம் முழுவதும் கதிரியக்கம் புற்று நோயை உண்டாக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட விஷயம்.




    அதுவே பொய் என்று ஒரு டாக்டரை சொல்லவைக்கிறது இந்திய அரசு. பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று பாரதி ரொம்பத் தெளிவாகவே சொல்ல்யிருக்கிறான்.

    இந்திய அரசு தூண்டிவிட்டிருக்கும் இன்னொரு பிரசாரம் கூடங்குளம் அணு மின் நிலையம் வராவிட்டால் தமிழகமே இருண்டுவிடும் என்பதாகும். கூடங்குளம் உலையிலிருந்து தமிழகத்துக்கு மட்டும் ஆயிரம் மெகாவாட் வருமாம்.


    இதுவும் நம் காதில் பூ சுற்றும் பிரசாரம்தான். முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். அணுசக்தி துறை ஆயிரம் மெகாவாட் தயாரிக்கும் திறனுடன் ஒரு உலையை நிறுவினால் அதில் பாதி அளவுகூட உற்பத்தியே செய்வதில்லை என்பதுதான் வரலாறு. கல்பாக்கம் உலைகளே கடந்த நான்கைந்து வருடங்களாகத்தான் மொத்த உற்பத்தி திறனில் 40 முதல் 50 சதவிகிதத்துக்கு மின்சாரம் தயாரிக்கும் நிலைக்கு வந்திருக்கின்றன.

    ஆய்வாளர் மோகன் சர்மா கணக்கிட்டுள்ளபடி கூடங்குளத்தில் உள்ள இரண்டு உலைகளும் இயங்க ஆரம்பித்து மொத்த உற்பத்தித் திறனாகிய 2 ஆயிரம் மெகாவாட்டில் 60 சதவிகித மின்சாரம் தயாரித்தாலும், 1200 மெகாவாட்தான் வரும். இதில் பத்து சதவிகிதம் கூடங்குளம் வளாகத்துக்கே செலவாகிவிடும். (வழக்கமாக அணு உலைகள் தங்கள் உபயோகத்துக்கே 12.5 சதம் செலவழிக்கின்றன). மீதி 1080 மெகாவாட்தான்.

    இதில் தமிழகத்தின் பங்கு 50 சதவிகிதம் எனப்படுகிறது. (இதுவும் வழக்கமாக 30 சதவிகிதம்தான்.) ஐம்பது என்றே வைத்தாலும் கிடைக்கப் போவது 540 மெகாவாட். இதில் 25 சதம் வழக்கமாக தமிழகத்தில் மின்கடத்துவதில் ஏற்படும் டிரான்ஸ்மிஷன் இழப்பு. எனவே நிகர மின்சாரம் கிடைக்கக் கூடியது 405 மெகாவாட்தான்.

    இதற்கு இத்தனை கோடி செலவு செய்து படு ஆபத்தான வம்பை விலைக்கு வாங்கத் தேவையே இல்லை. தமிழகம் முழுக்கவும் இருக்கும் குண்டு பல்புகளை மாறி குழல் பல்புகளாக்கினாலே 500 மெகாவாட்டுக்கும் மேலே மின்சாரம் மிச்சமாகிவிடும். இப்போது டிரான்ஸ்மிஷன் லாஸ் என்ப்படும் மின் கடத்துதலில் ஏற்படும் இழப்பால் இந்தியாவில் நாம் தயாரிக்கும் மின்சாரத்தில் 25 முதல் 40 சதவிகிதத்தை சுமார் 72 ஆயிரம் மெகாவாட்டை விநியோகிக்கும்போதே இழந்து கொண்டிருக்கிறோம்.

    ஸ்வீடன் நாட்டில் இந்த இழப்பு வெறும் 7 சதவிகிதம்தான். அதுதான் உலக சராசரி. விநியோகத்தில் இழப்பை குறைக்க விஞ்ஞானிகள் வேலை செய்தாலே, சுமார் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் நமக்குக் கிடைத்துவிடும். வெறும் பத்து சதவிகிதமாகக் குறைத்தாலே தமிழகத்தில் 1575 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.


    இந்த மாதிரி நடைமுறைக்கேற்ற மாற்றுவழிகள் இன்னும் நிறையவே இருக்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 5500 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகளிலிருந்து தயாரிக்கலாம். ஆனால் இதில் 4700 மெகாவாட்தான் இப்போது தயாரிக்கிறோம். அதிலேயே இன்னும் 700 மெகாவாட் மீதம் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த வீடுகளில் வெறும் 25 சதவிகித வீடுகளின் கூரைகளில் மட்டும் இரண்டு கிலோவாட் மின்சாரம் தயாரிக்கும் சக்தியுடைய சூரிய ஒளி பேனல்கள் அமைத்தால் அதிலிருந்தே மொத்தம் ஏழாயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதையே பள்ளிகள்,கல்லூரிகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், என்று பெரிய பெரிய கட்டடங்களின் மேற்கூரைகளில் அமைத்தால் தமிழகத்தில் மின்சாரம் உபரியாகிவிடும்.


    காற்றாலைகளிலிருந்து மட்டும் மொத்தம் ஒரு லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பு இந்தியாவில் உள்ளது. புனல் மின்சாரம் எனப்படும் நீர் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கான அரசின் தேசிய புனல்மின் கழகம் இந்தியாவில் மொத்தமாக ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 700 மெகாவாட் தயாரிக்கமுடியும் என்றும் இப்போது அதில் வெறும் 19 சதவிகிதம் மட்டுமே தயாரிக்கிறோம் என்றும் தெரிவித்திருக்கிறது.


    சூரியசக்தி பல மடங்கு பிரும்மாண்டமானது. மொத்தம் நான்கு லட்சம் மெகாவாட் தயாரிக்க முடியும்.இந்தியாவின் மொத்தத் தேவையை விட இது பல மடங்கு அதிகம். வருடத்தில் நான்கே மாதம் மட்டும் வெயில் அடிக்கக்கூடிய ஜெர்மனி, நார்வே போன்ற நாடுகளில் ஏற்கனவே மொத்த மின்சாரத்தில் 20 சதவிகிதத்தை சூரியசக்தியிலிருந்து தயாரிக்கிறார்கள். இந்தியாவில் வருடத்தில் 300 நாட்களுக்கு மொத்தம் 2500 மணி நேரம் தெளிவான வெயில் இருக்கிறது. சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் போட்டோ வொல்டேய்க் செல் பேனல்கள் தங்கள் மொத்த திறனில் வெறும் பத்து சதவிகிதம் மட்டுமே இயங்கினால் கூட, கிடைக்கும் மின்சாரம் 2015ல் இந்தியாவில் வீட்டுத் தேவைக்கான மின்சாரத்தை விட ஆயிரம் மடங்கு அதிகம் !




    சூரியசக்தி மின்சாரம் தயாரிக்கச் செலவு அதிகம் என்று அணு ஆதரவாளர்கள் பிரசாரம் செய்வது இன்னொரு பொய். எதை விட இது செலவு அதிகம் ? அணுமின்சாரத்தின் அசல் விலையை அவர்கள் மூடி மறைத்துவிட்டு மற்றவற்றை விலை அதிகம் என்று பொய் பிரசாரம்தான் செய்கிறார்கள். ஜெய்தாபூரில் பிரெஞ்ச் கம்பெனியிடமிருந்து அணு உலை வாங்கி நிறுவுவதற்கு அவர்கள் போட்டிருக்கும் மதிப்பீடு ஒரு கிலோவாட்டுக்கு 21 கோடி ரூபாய். ஆனால் ஏழு இடங்களில் சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்க தனியாருக்கு இந்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. அங்கே நிறுவும் செலவு ஒரு கிலோவாட்டுக்கு 12 கோடி ரூபாய்தான். நிறுவியபின்னர் பராமரிப்பு செலவும் அணு உலையை விடக் குறைவு. ஆபத்து துளியும் இல்லை. அணு உலையை லட்சக்கணக்கான வருடத்துக்குப் பாதுகாத்தே திவாலாகிவிடுவோம்.




    இப்போது சூரியசக்தியில் மின்சாரம் தயாரிக்கத் தேவைப்படும் பொருட்களின் விலை படு வேகமாக சரிந்து வருகிறது. சோலார் போட்டோவோல்டேய்க் செல் தயாரிக்கத் தேவைப்படும் பாலி-சிலிக்கான் விலை கடந்த மூன்று வருடங்களில் 93 சதவிகிதம் குறைந்துவிட்டது. அதனால் இந்த மின்சாரம் தயாரிக்க முன்வரும் தனியார் கம்பெனிகள் அரசுக்கு மின்சாரத்தை முன்பை விடக் குறைந்த விலையில் தர முன்வந்துவிட்டன. டிசம்பர் 2011ல் நடந்த ஏலத்தில் இந்திய அரசு ஒரு மெகாவாட்/மணி அளவு மின்சாரத்தை 15,390 ரூபாய்க்கு வாங்கத் தயார் என்று அறிவித்திருந்தது.




    ஆனால் பிரான்சின் இரண்டாவது பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனமான சோலேர் டைரக்ட் 7490 ரூபாய்க்கே விற்பதாக ஏலம் எடுத்திருக்கிறது. இது ஒரு வருடம் முன்பு இருந்த விலையை விட 34 சதவிகிதம் குறைவு. எனவே 2015க்குள் சூரிய மின்சாரத்தின் விலையும் இப்போது நிலக்கரியால் தயாரிக்கும் அனல் மின்சாரத்தின் விலையும் சமமாகிவிடும் என்று கருதுகிறார்கள்.




    காற்று சூரியசக்தி மின்சாரத்தையெல்லாம் தேசிய கிரிட்டில் இணைப்பது கடினம் என்றும் அவற்றைக் கொண்டு 500, 1000, 2000 மெகாவாட் நிலையங்களை நடத்த முடியாது என்பது அவர்களின் இன்னொரு வாதம். முதலில் ஏன் எல்லா மின்நிலையங்களையும் ஆயிரக்கணக்கான மெகாவாட் உற்பத்தி நிலையமாக வைக்கவேண்டும் என்பதையே நாம் கேள்வி கேட்கவேண்டும். போக்குவரத்துக்குப் பயன்படும் வாகனங்களை எடுத்துக் கொள்ளுவோம். சைக்கிள், டூ வீலர், கார், ஆட்டோ, பஸ், ரயில், விமானம், கப்பல் என்று வகைவகையாக இருக்கின்றன. அடுத்த தெருவுக்குச் செல்வதற்கு விமான சர்வீஸ் நடத்தச் சொல்வோமா ?




    இதே போல மின் உபயோகமும் பலதரப்பட்டது. வீட்டு உபயோகம், விவசாய உபயோகம், தொழிற்சாலை உபயோகம், பொது உபயோகம், கிராமத் தேவை, நகரத் தேவை என்று மாறுபட்டவை. எல்லாவற்றையும் கிரிட் மூலம்தான் செய்யவேண்டும் என்ற அணுகுமுறையே தவறானது. இதனால்தான் மின்சாரத்தை அனுப்புவதில் டிரான்ஸ்மிஷன் லாஸ் என்பதே பெருமளவு ஏற்படுகிறது.




    இப்போதுள்ள அனல், புனல் மின் நிலையங்களைக் கொண்டு தொழிற்சாலை தேவைகளை பூர்த்தி செய்யலாம். வீட்டுத் தேவைகள், விவசாயத் தேவைகளில் பெரும்பகுதி எல்லாம் சிறு மின் நிலையங்களாலேயே பூர்த்தி செய்யக்கூடியவை. கிரிட் மின்சாரம் இல்லாதபோது மின்வெட்டை சமாளிக்க ஒவ்வொரு வீட்டிலும் இன்வர்ட்டர் வைத்துக் கொள்வதை விட சூரியசக்தியில் மின்சாரம் தயாரிக்கும் கருவிகளைப் பொருத்திக் கொள்ளலாம்.




    மின்சார விநியோக கண்ட்ரோல் அதிகாரத்தை ஒரே இடத்தில் குவித்துவைத்துக் கொள்ளத்தான் கிரிட் முறை பயன்படுகிறது. சென்னையில் ஒரு மணி நேரம்தான் பவர்கட். அத்திப்பட்டில் ஆறு மணி நேரம் பவர்கட் என்பது கிரிட் அதிகாரத்தால் நடப்பது. அத்திப்பட்டில் சூரியசக்தி, காற்றாலை மின்சாரம் இருந்தால் அங்கே ஒரு மணி நேரம் கூட பவர் கட் இருக்காது.




    சூரியசக்தி மின்சாரத்தை பல விதமாக தயாரிக்கலாம். போட்டொவோல்டேய்க் செல் பேனல் முறை ஒன்று. இன்னொன்று குவிசக்தி முறை. கண்ணாடிகள், லென்சுகளைப் பயன்படுத்தி தீவிரமான ஒளிக்கற்றை மூலம் உருக்கிய உப்பை சூடாக்கி அந்த வெப்பத்திலிருந்து தயாரிப்பதாகும். இந்தியாவில் எல்லா முறைகளையும் பயன்படுத்த வசதி இருக்கிறது. ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் 50 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு இருக்கிறது. அங்கே மட்டும் பிரும்மாண்டமான சூரியசக்தி மின் நிலையங்களை ஏற்படுத்தினால் 15 ஆயிரம் மெகாவாட் வரை தயாரித்து கிரிட்டுக்கே அனுப்பலாம்.




    வெளிநாடுகளில் சூரியசக்தி மின்சாரம் நிலை எப்படி தெரியுமா? இந்தியாவைப் போல வருடம் முழுவது வெயில் இல்லாத நாடுகள் கூட முன்பே இதில் இறங்கிவிட்டன. ஸ்பெயினில் இப்போதே 12 சதவிகித மின்சாரம் சூரிய மின்சாரம்தான். இஸ்ரேலில் 90 சதவிகித வீடுகளில் சூரிய சக்தி ஹீட்டர் வந்துவிட்டது. சீனா போட்டோவொல்டெய்க் செல் தயாரிப்பில் உலகத்தில் முதலிடத்தில் இருக்கிறது.


    உலக அளவில் 3800 மெகாவாட்டுக்கான் சோலார் பேனல்களில் சரி பாதியை தயாரித்து ஏற்றுமதி செய்திருப்பது சீனாதான். சில மாதங்களே வெயில் அடிக்கும் ஜெர்மனியில் மொத்த மின்சாரத்தில் 25 சதவிகிதத்தை சூரியசக்தியில் தயாரிப்பதை 2050க்குள் சாதிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. .




    இப்போது உலகம் முழுவதும் உற்பத்தியாகும் சூரியசக்தி மின்சாரத்தில் சரிபாதி அமெரிக்காவில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் 2020க்குள் அதன் மொத்த மின் தேவையில் 33 சதவிகிதம் சூரியசக்தியிலிருந்து பெறுவது என்ற இலக்குடன் திட்டங்கள் நடக்கின்றன. கிரிட்டுக்கே மின்சாரம் அனுப்பும் திட்டங்களையும் அமெரிக்கா மேற்கொண்டிருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே சுமார் 500 மெகாவாட் சூரிய மின்சாரத்தை கிரிட்டுடன் இணைத்துவிட்டது.




    இன்னொரு பக்கம் தனியார் வீடுகளிலும் அவரவர் அலுவலகங்களிலும் சுயதேவைக்காக போட்டொ வோல்டெய்க் செல் பேனல் அமைத்து மின்சாரம் தயாரித்துக் கொள்வதை ஊக்குவிக்கிறது. தங்கள் தேவைக்குப் போக உபரி சூரிய மின்சாரத்தை கம்பெனிக்கு விற்கும் வீடுகள் பெருகிவருகின்றன. மின் கட்டணமாக 2400 டாலர் வரை செலுத்திய ஒரு வீட்டில் 25 ஆயிரம் டாலர் செலவில் சூரிய மின்சார தயாரிப்பு பேனல் பொருத்தியதும் அந்த முழு மின்கட்டணம் மிச்சமாகிவிடுகிறது.




    அமெரிக்காவில் கடந்த 30 வருடங்களாக ஒரு புதிய அணு உலை கூடத் தொடங்கவில்லை என்பதை இத்துடன் சேர்த்து கவனிக்க வேண்டும்.


    ஏன் இந்திய அரசுக்கு மட்டும்
    இந்த கொலைவெறியான உலைவெறி?

    -செல்வகுமார் வழியாக
    24.மார்ச்.2012