நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Friday, April 21, 2017

தமிழ்நாட்டில் பதிப்பகங்களே இல்லை. எல்லாமே விற்பனையகங்கள்தான்!


    எப்போதும் இல்லாத அளவு இந்தாண்டு (ஏப்-23-ம் தேதி) புத்தகதினம் அதிகமாக கவனிக்கப்படுவதைப்போல உணர்கிறேன். காரணம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நூலகங்களிலும், புத்தகதினத்தைக் கொண்டாட அரசு முயற்சி எடுத்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள கிட்டத்தட்ட அனைத்துப் பதிப்பகங்களுமே முடிந்த அளவு வாசகர்களை கவர்வதற்கான வேலைகளில் இறங்கி, 10 சதவீதம் முதல் 50 சதவீதம்வரை சலுகைகளை அறிவித்துள்ளது
டிஸ்கவரி புக் பேலஸ்- போன்ற புத்தக நிலையங்களின் நிலை ஒரு பக்கம் வாய்க்கும், வயிற்றுக்கும் என இழுத்துக்கொண்டிருந்தாலும், எல்லாநாளும், எல்லா மாதங்களும், ஏதேனுமொரு மாவட்ட தலைநகரின் ஒதுக்குப்புற கல்யாண மண்டபத்தை அடைத்துக்கொண்டு புத்தகக்கண்காட்சி நடத்துகொண்டிருப்பதை இப்போது நீங்கள் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் காணலாம். பிறகு அங்கிருந்து களைக்கூத்தாடிகளைப்போல நகர்ந்து அடுத்த மாவட்டத்திற்கு சென்றுவிடுவார்கள். வாசகனை மட்டுமே நம்பி இந்த வேலையை ஒரு பக்கம் புத்தக விற்பனையாளர்கள் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
ஓயாது புத்தகங்களை விளைவித்துவித்துக் கொண்டிருக்கும் பதிப்பகங்களிடமிருந்து, இவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் கிடைப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் தன் தொழிலுக்கு ஆதாரமாக இருக்கவேண்டிய பதிப்பகங்களே, இப்போது போட்டியாளனாக களமிறங்கிவிடுவது கிட்டத்தட்ட வேறெந்த தொழிலிலும் இல்லாத முக்கியான சவாலாகும். சாதாரன நாட்களில் வாசகனுக்கு 10% தள்ளுபடி தரவே மூக்கால் அழும் பதிப்பகங்கள், விற்ப்னையாளார்களுக்கு கூடுதலாக 5% கேட்டால் குற்றவாளிக்கூண்டில் நிற்க வைக்கும் அதே பதிப்பாளர்கள், புத்தக தினத்தில் மட்டும் 50%வரை தள்ளுபடி அறிவிப்பது ஆச்சரியமே. அதனினும் ஆச்சரியமானது ஒரு கண்காட்சியே முழுக்க முழுக்க 50% தள்ளுபடிக் கண்காட்சியாகவும் நடத்த முடிகிறது. இதில் பதிப்பகங்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். நிச்சயமாக விற்பனையாளர்களுக்கு இதில் இடமில்லை. அதற்கான சூழலும் இல்லை.
பபாசி நடத்தும் சென்னையின் முக்கியமான அடையாளமாக விளங்கும் ஜனவரி புத்தகக் கண்காட்சியில்கூட பதிப்பகங்களுக்கென்று தனியாக ஒரு அரங்கை ஒதுக்கிவிட வேண்டும் என்ற கோரிக்கையெல்லாம் ஒருகட்டத்தில் வைக்கப்பட்டது. இவையெல்லாம் அப்பட்டமான விற்பனை சார்ந்த வியாபார நோக்கமே அன்றி, எந்தவிதத்திலும் தமிழ்தொண்டாற்றும் தனிவிருப்பம் அல்ல. அதனால்தான் சொல்கிறேன். தமிழ்நாட்டில் இருப்பது எதுவுமே பதிப்பகங்கள் அல்ல, எல்லாமே விற்பனையகங்கள் என்று.

Tuesday, August 16, 2016

ஜோக்கர் திரைப்படம் குறித்து

ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நல்ல படம்னு சொல்லுவாங்களே, அந்தமாதிரிப்படம் இல்ல ஜோக்கர். அதையும் தாண்டி. யோவ்.. கிராமத்துல இருக்கிறவங்களுக்கு கக்கூஸ் போறது ஒரு பிரச்சினையான்னு நாம்ம சாதாரணமா விட்டரமுடியாது. கழிப்பறைங்கிறது நாகரிக வளர்ச்சிக்கானதா என்னவோ தெரியாது. ஆனா அது ஒவ்வொருவருக்குமான அடிப்படைத் தேவைன்னு சொல்லுது ஜோக்கர். ஏன்னா அதுக்கு நாம்ம கிராமத்தில வாழ்ந்து பாக்கனும். 8-ம் வகுப்பு படிக்கிறவரை பள்ளிக்கூடத்தில்கூட கழிப்பறை கிடையாது. சென்னைக்கு வந்து, சென்னைலயே திருமணம் செய்துட்டு போனதுக்கப்புறம்தான் கழிப்பறை கட்டற பேச்சையே எடுக்க முடிஞ்சதுங்கிறதுதான் அனுபவம்.



அப்படிப்பட்ட அத்தியாவசியத் தேவையான கழிபறைய முதல்ல கட்டு அதுக்கப்புறம் தாலியக் கட்டுன்னு ஒரு பொண்ணு சொல்லிட்டா நம்ம ஹீரோவுக்கு சொல்லவா வேணும். இவ்வளவுதானேன்னு யோசிக்கும்போதுதான் அரசாங்கமே கழிப்பறை கட்ட பணம் தராங்கிற தகவல் கேட்டு போறாரு. அங்கிருந்துதான் ஆரம்பிக்குது ஜோக்கர். இதுக்கப்புறம் நடக்கிற ஒவ்வொன்னுமே ஜோக்கர்தான். தப்பு பண்றவன் நல்லவன் - புத்திசாலி, தட்டிக்கேக்கிறவன் ஜோக்கர் - உதவாதவன்.
நம்ம கலைமரபுங்கிறது நாடகம். எப்பமே நாடகத்தில கட்டியக்காரங்கிறவன் அடி உதை வாங்கக் கூடிய ஜோக்கரா இருப்பான், அவன் வாயாலத்தான் குறைகளையும் சுட்டிக்காட்டும்படியாகவும் இருக்கும். அதுமாதிரிதான் இந்த ஜோக்கரும்.
ஒரு கழிப்பறை கட்டற போராட்டத்தில இந்தியாவோட அத்தன நிகழ்கால அரசியல் அட்டூழியங்களையும் தோலுரிச்சுக் காட்டும்போது தியேட்டரில் கைத்தட்டல்கள். எல்லாருக்குள்ளும் போராட்டவாதி இருக்கத்தான் செய்யறான். அதை கண்டு பிடிச்சு நமக்கு உணர்த்தும் வேலையை செய்த கையோடு நாளைக்கு ஒரு போராட்டாம் இருக்கு வீதிக்கு வான்னு அழைக்கும்போது நாம் உண்மையாவே போராட தயாராத்தான் இருக்கிறோம் என்ற உணர்வு.
அனைத்து கதா பாத்திரங்களும் நமக்கு பரிசயமான கிராமத்துக் காரர்களாகவே உணரவைப்பதிலும் ஜோக்கர் நிமிர்ந்து நிற்கிறது. அந்த வகையில் எழுத்தாளர், பதிப்பாளர், கதைசொல்லி பவா செல்லதுரை -யும் அட்டகாசப் படுத்தியுள்ளார்.
இயக்குநர் ராஜு முருகன் அவர்களுக்கு இதுபோன்ற ஒரு திரைப்படத்தைக் கொடுத்ததுக்காக நமது வாழ்த்துக்கள். கமர்சியலா ஜெயிக்கனும்னா கருத்து சொல்லக்கூடாதுங்கிற கோடம்பாக்கத்து இயக்குநர்களுக்கு புளிக் கரைச்சல் கொடுத்து அவர்களின் விரதத்தை முடித்து வைக்க வந்துள்ள ஜோக்கர் திரையுலகில் பலகாலத்துக்கும் நமக்கு பாடமாக, முன்மாதிரியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.






Wednesday, October 2, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் -பற்றி

       

                                                                  “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”


                                                                                           


     நேற்று இரவுக் காட்சியில் எப்படியும்ஓநாயும் ஆட்டுக்குட்டியும்பார்த்துவிட வேண்டும் என்ற முடிவோடு இரவு 10 மணிக்கு பிரேம் நேஷ்னல்  மால் வாசலில் நின்றேன். என்னால் யூகிக்கவே முடியாத கூட்டமாக இருந்தது. உள்ளே வண்டிகள் நுழையவே முடியாத அளவு கூட்டம். பைக்கை வெளியே நிறுத்திவிட்டு முதல்ல டிக்கெட் வாங்கிவிடலாம் என்ற முடிவோடு போனேன்.  பெருங்கூட்டத்தில் டிக்கெட் கிடைக்காமல் திரும்பினேன். சரி படம் பார்த்தே ஆகவேண்டிய எனது  கட்டாயமான மனநிலைக்கு எந்த காரணமும் எடுபடவில்லை.  பக்கத்தில் உள்ள தேவி கருமாரி தியேட்டருக்கு ஓடினேன். இது ஸ்டார் ஹோட்டல்ல ரூம் கிடைக்கலைனா ப்ளாட்பாரத்தில படுக்கிறமாதிரியான வேறுபாடு. ஓடினேன் ஓடினேன்.. தியேட்டரை நெருங்கவே முடியவில்லை. வழியிலேயே அவ்வளவு டிராபிக். படம்பார்த்துவிட்டு திரும்பி வருக் கூட்டம் இது. அப்போதே இங்கையும் பார்க்க முடியாதோ என்ற டவுட் வந்திருச்சு. உள்ளபோய் வண்டிய பார்க் பண்றதுக்குள்ள போதும் போதும் என்றாகிவிட்டது.  ஒருவழியாக அடித்துப் பிடித்து ஓடிவந்து டிக்கெட் கவுண்டரில் நின்றால்  அங்கையும் டிக்கெட் இல்லை கதைதான்.  டிக்கெட் இலைன்னா எதுக்கு இவ்வளவு கூட்டம். அப்படி என்னத்தைதான் வாங்கிட்டு இருக்காங்கனு பார்த்தா அவ்ளோ நேரத்திக்கும் முன்பதிவு வேலையை ஆரம்பிச்சிட்டாங்க.  வேறு வழியில்லாமல் முன்பதிவு செய்துகொண்டிருந்த கூட்டத்திலிருந்து வெளியே வந்த ஒருவன்  டிக்கெட்டை எடுத்துக் கொண்டு தியேட்டருக்குள் நுழைய முயன்றார். அவரை மடக்கி விசாரித்ததில் அது  “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்படத்திற்கான டிக்கெட்டுதான். ஆஹா முழிச்சுக்குடா கைப்பிள்ளை என்பதுபோல நேராக ஆபிஸ் ரூமுக்கு ஓடினேன். எனது இயக்குநர் சங்க உறுப்பினர் அட்டையை காட்டி  “சார் டைரக்டர் யூனியன் மெம்பர், இந்தப் படத்தில வேலை செய்திருக்கேன், இதோ பாருங்க ,” என்று உறுப்பினர் அட்டையை காட்டி “ஓநாயும் ஆட்டுக்குட்டியும் -கு  ஒரே ஒரு டிக்கெட் மட்டும்என்றேன்.  எந்தமறுப்பும் இல்லாமல் 60 ரூபாயில் டிக்கெட் கையில் வந்தது. தியேட்டருக்குள் சென்று எனக்கான இருக்கையில் அமர்ந்தேன். உள்ளே ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போலத்தான். சரி இன்னைக்கு படம் பார்த்த மாதிரிதான் என்பது போலத்தான் மனநிலை..  பாதிபேருக்கும் மேல் பொதையில் இருந்தார்கள். அப்படியே பட்டிக்காட்டு ஓலைக்கொட்டைகை எபெக்ட்டில் விசில் சத்த வேரு காதைப் பிளந்தது.  கதை, திரைக்கதை,  முன்னணி இசை ( அப்படித்தான் டைடில் கார்டு போடுகிறார்கள்)  என்று  அமைதியாக படம்பார்க்கலாம் என்று புறப்பட்டவனுக்கு இப்படி வந்து மாட்டிகிட்டமே என்பது போன்ற மனநிலை.. அனைவராலும் பாராட்டப் படும் ஒரு படத்தை கூச்சல், குடி  என்று இப்படி நாரடிக்கிரார்களே என்று  நோகாமல் இருக்க முடியவில்லை, ஒருவழியாக படம் தொடங்கியது.
  மிஸ்கின் சுடப்பட்டு விழும் முதல் காட்சியில் ஆரவாரமாகவும், கெக்களிப்போடும் பெரும் சத்தமாய் நிறைந்திருந்த திரையரங்கம்.. அடுத்த ஐந்து நிமிடத்தில் அனைவரையும் பெட்டிப்பாம்பாக்கிக்கொண்டு அடங்கிவிடுகிறது. எல்லோரும் ஒரு வகையான மந்தமான மனநிலையில், பித்துபிடித்து மந்திரத்துக்கு கட்டுப் பட்டவர்களைப்போல மாறிவிடுகின்றார்கள். அவ்வளவு அழுத்தமாக முதல் காட்சியிலேயே பார்வையாளனுக்குள் கதையை வேகமாக ஊடுருவச் செய்துவிடுகிறார்.  ஒநாயும் ஆட்டுக் குட்டியையும் பொருத்தவரை கதையும், அதை சொல்ல எடுத்துக்கொண்ட திரைக்கதை வடிவமும் தமிழ் சினிமா பார்வையாளனுக்கு முற்றிலும் புதிது.  இதுவரை ஆரம்பத்தில் ஐந்து முதல் பத்து காட்சிகள் வரை, பார்வையாளனின் கையைப் பிடித்து மெதுவாக கதைக்குள் அழைத்துப் போவதுதைத்தான், ஒரு வைகயான மயக்க மருந்து கொடுக்கும் வேலையைச் செய்வதைப் போன்ற திரைக்கதையைத்தான் நாம் அனைவரும் பார்த்துப் பழகி இருகிறோம். ஆனால் தலாடடியாக , சும்மா வெருமனே நின்றுகொண்டிருந்தவனை காரின் பகவாட்டுக் கதைவைத் திறந்து உள்ளே இழுத்துப் போட்டு பயணிக்கும் கடத்தல்காரர்களைப்போல கதைக்குள் இழுத்துப்போட்டு பயணிக்க வைப்பதோடு, நம் தலையில் துப்பாக்கியை வைத்து எச்சரித்து நான் சொல்வதை மட்டும்கேட்டுக் கொண்டுவந்தால் போதும். உன் விளையாட்டுக்கு இங்கே இடமில்லை என்பது போல  நம்மை கப்சிப் ஆக்கிவிடுகிறார்.
  ஒரு பக்கம் இயக்குநராக மிஸ்கின் நம்மை அடாவடியாக கதைக்குள் கட்டிப்போட்டு வைக்க, மிகவும் மென்மையாகவும், அமைதியாகவும்  விசாரணையைத் துவங்கும் இளையராஜா, இருக்கும் கொஞ்சநஞ்ச  வெளி உணர்வுகளையும் மெதுவாக பரித்துக்கொண்டு திரைக்குள் ஒன்றவைத்துவிடுகிறார்.
ஒரு பரப்பான பிளாஷ்பேக் காட்சிகளை குழந்தைக்குச் சொல்லும் கதையாக மொத்த குழப்பத்திற்கும் விடைசொல்லும் மிஷ்கின் நடிகராகவும் நின்று, கிட்டத்தட்ட இரண்டு நிமிடத்துக்கும் மேலாக ஒரே காட்சியாக நீளும் அந்தக் காட்சியில் நம்மையும் கலங்கடித்துவிடுகிறார். உலகத் திரைப்படத்தை தமிழில் எடுப்பது ஒரு வகை, தமிழ்படத்தினை உலக அளவுக்கு எடுப்பது இன்னொரு வகை. “ஓநாயும் ஆட்டுக் குட்டியும்” இதில் இரண்டாம் வகை. இன்னும் பலகாலத்துக்கு இந்தப் படத்தை திரையுலகம் கொண்டாடும்.