நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Saturday, December 11, 2010

டிஸ்கவரி புக் பேலஸ் இரண்டாம் ஆண்டு துவக்கம் மற்றும் புத்தக வெளியீட்டு விழா

வணக்கம் தோழ தோழியரே..!
டிஸ்கவரி புக் பேலஸ் ஆரம்பிக்கப் பட்டு ஓராண்டு நிறைவு பெறுகிறது. இரண்டாம் ஆண்டு துவக்கத்தினை ஆரவாரமாக கொண்டாட அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது! அதோடு முதல் முறையாக பதிப்புத்துறையில் கால் பதித்து முதல் புத்தக வெளியீடும் நடக்க விருக்க்கிறது. அமுத சுரபி பத்திரிக்கையாசிரியரும் , எழுத்தாளருமான திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் இயக்குநர் N. லிங்குசாமி அவர்கள் இரண்டாம் ஆண்டை துவங்கி வைத்து புத்தகம் வெளியிடுகிறார். கவிஞர் நா.முத்துக்குமார் , பத்திரிக்கையாளர் ஞாநி ,ஒளிப்பதிவாளர் திரு செழியன் ,பேராசிரியர் இராமகுருநாதன் மற்றும் யுகமாயினி சித்தன் அவர்கள் கலந்து கொள்கிறார்கள், அனைவரும் வருகை தாருங்கள்!

Friday, October 22, 2010

எஸ்.ராமகிருஷ்ணன் - திரைப்படக் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு

நேற்று (21/10/2010) சென்னை திரைப்படக் கல்லூரியின் இயக்குனர் பயிற்சிக்கு படிக்கும் மாணவர்கள்  சிலருடன்  எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவுமான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடனான சுமார் மூன்று மணிநேர கலந்துரையாடல் நிகழ்ச்சி நமது டிஸ்கவரி புக் பேலஸ்-ல் நடந்தது. உதவி இயக்குனரும், பத்திரிக்கையாளருமான நண்பர் ப்ளாக்  அவர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.    (முழுக்க முழுக்க மாணவர்கள் தங்களுக்கான சந்திப்பாக மட்டுமே ஏற்படுத்தியிருந்ததால் நாம் யாருக்கும் தகவல் சொல்ல முடியாத சூழ்நிலை.) சந்திப்பில் பல சுவாரஸ்யமான தகவல்களுடன், அறிவுபூர்வமான மற்றும் சிந்தனைக்கு விருந்தாக பல கேள்வி பதில்கள் அமைந்தது. அனைத்தும் சினிமாவுக்கும் வாழ்க்கைக்குமான நெருக்கமான பகுதிகளாக அமைந்தது. இதன் முழு விபரங்களும் விரைவில் சினிமா எக்ஸ்பிரஸி- ல் வர இருப்பதால் நாம் அதிகமாக எழுத முடியாது.  இடையிடையே அத்துமீறி குறுக்கிட்ட கவிஞர் விக்ரமாதித்தன் கூடுதல் சுவாரஷ்யம்

Wednesday, September 22, 2010

இலங்கை தமிழ் எம் பி திரு சுரேஸ் பிரேமச்சந்திரனுடம் சந்திப்பு


 இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின்  பேச்சாளரும், யாழ். மாவட்ட எம்.பியுமாக உள்ளவர் சுரேஸ் பிரேமச்சந்திரன். சென்னை வந்த அவர் சில புத்தகங்கள் வாங்கும் பொருட்டு நமது டிஸ்கவரி புக் பேலஸ்- கு வந்திருந்தார். அவருடன் இலங்கை நிலவரங்களை பற்றி உரையாடியதில்  “எனது வருத்தம் அங்குள்ள உண்மையான நிலவரங்கள் தமிழக தலைவர்களுக்கு  தெரிந்திருந்தாலும் கூட அதை பேசாமல் இன்னும் தலைவன் வருவான் தனி ஈழம் மலரும்”- என்று மட்டுமே பேசுவசுதுதான். இதனால் அங்குள்ள இன்றைய தமிழர்களுக்கு என்ன பயன் என்று பார்க்க வேண்டும். 
தலைவன் வரவேண்டும் என்பது அனைவரின் அவாதான். ஆனால் அதற்குள் நடந்து முடிந்திருக்கும் இன அழிப்பு மாற்றங்களை யார் தடுத்து நிறுத்துவது - என்று வருத்தத்துடன் கூறினார்.

Monday, August 16, 2010

காலச்சுவடு புத்தக கண்காட்சி

வாசகர்களே..! காலச்சுவடு பதிப்பகத்தின் அனைத்து புத்தகங்களும் இப்போது  15/8/2010 முதல் 31/9/2010 வரை சிறப்புக் கழிவு 10% டன் டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கிறது, எந்த புத்தகமும் இல்லை என்று சொல்லாத அளவு  அனைத்து புத்தகளும் வரவழைக்கப் பட்டுள்ளதால் வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

Saturday, August 14, 2010

சிலப்பதிகாரம் தழுவிய “மாதரி கதை” நாடகம். நாளை மக்கள் தொலைக்காட்சியில்

       

சிலப்பதிகாரத்தின் முக்கிய பாத்திரங்களில்
ஒன்றான மாதரி என்ற பெண்ணின்
 பாத்திரத்தை மையப்படுத்தி எழுத்தாளர் வெளி ரங்கராஜன் அவர்கள் இயக்கிய நாடகம் “ மாதரி கதை”. இந்நாடகம்  ஜனவரி 14-ம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தொலைக்காட்சியில் 12.00 மணி முதல் 1.00 மணிவரை ஒளிபரப்பாக உள்ளது. நமது காப்பிய இலக்கியத்தின் ஒரு பகுதி இன்றைய நவீன நாடகவடிவத்தோடு இணைந்து தன்னை எவ்வாறு அலங்கரித்துக் கொள்கிறது என்பதை அனைவரும் தவறாமல் பார்க்கவும்.

Wednesday, August 4, 2010

“நகரத்துக்கு வெளியே” விமர்சன கூட்டம் குறித்து - /என்.விநாயக முருகன்

நன்றி உயிரோசை இணைய இதழ்

சிறுகதைகள் வாசிப்பதும், எழுதுவதும் அருகி விட்ட சூழலில் விஜயமகேந்திரனின் 'நகரத்திற்கு வெளியே' தொகுப்பின் மீதான விமர்சனக் கூட்டம் கவனம் பெறுகிறது. ‘அகநாழிகை’ பொன்.வாசுதேவன் ஏற்பாடு செய்திருந்த இந்த விமர்சனக்கூட்டம், மேற்கு கே.கே.நகர் டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்றது.

பெருநகரப் பரபரப்புகள் ஏதுமற்ற, மழை வருமா… வராதாவென்றிருந்த ஞாயிறொன்றின் மந்தமான மாலையில் டிஸ்கவரி புக் பேலஸிற்கு சென்றேன். டிஸ்கவரி புக் பேலஸ் எதிரே இருந்த தேநீர்க்கடையில் ஒரு பெண் தோளில் பையுடன் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். கடையருகே நெருங்கும் போதுதான் லீனா மணிமேகலையும், பக்கத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த ஜெல்ராடையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. ஊரின் அழகான ‌சில பெண்கள் ஸ்கூட்டியில் தேநீர்க்கடையைக் கடந்து சென்றுக் கொண்டிருந்தார்கள். டிஸ்கவரி புக் பேலஸ் கடை மாடியில் முதல் தளத்தில் இருக்கிறது. மாடி ஏறினேன். பின்னால் தாரா கணேசன் வந்துககொண்டிருந்தார். கடைக்குள் ஏற்கனவே பொன்.வாசுதேவன், யவனிகா ஸ்ரீராம், ஐயப்ப மாதவன், தாரா கணேசன், ஆர்.அபிலாஷ், பாக்கியம் சங்கர் மற்றும் செல்வப்புவியரசன் இருந்தார்கள். கடந்த ஆண்டுதான் மேற்கு கே.கே. நகரில் இந்தப் புத்தகக்கடையை ஆரம்பித்தார்கள். இன்று இலக்கியக் கூட்டங்கள் குறிப்பாக பதிவர் கூட்டம் என்றால் டிஸ்கவரி புக் பேலஸ் என்று சொல்லுமளவுக்குக் கடை பிரபலமாகியுள்ளது. கடையில் இருந்த புத்தக அலமாரிகளைத் தற்காலிகமாக ஓரங்கட்டிவிட்டால் ஐம்பது பேர் அமரலாம்.

கடை உரிமையாளர் வேடியப்பனைப் பார்த்து ஒரு ஹலோ ,சொல்லிவிட்டு நாற்காலியில் அமர்ந்து சுற்றிலும் பார்த்தேன். சிறுகதைத் தொகுப்பா அல்லது கவிதைத் தொகுப்பா என்று ஒருகணம் குழம்பி விட்டது. சி.மோகன், லீனா மணிமேகலை,யவனிகா ஸ்ரீராம், ஐயப்ப மாதவன், தாரா கணேசன், நரன்,நிலாரசிகன், ச.முத்துவேல்,உழவன் என்று கவிஞர்கள் கூட்டமாக இருந்தது. குறிப்பாக கார்த்தி, லக்கி லுக், அதிஷா, கேபிள் சங்கர், மணிஜி மற்றும் பல தமிழ் பதிவர்களை அதிகமாக பார்க்க முடிந்தது. முன் வரிசையில் சந்திரா, நிஜந்தன் அமர்ந்திருந்தார்கள்.

கூட்டத்தின் ஆரம்பமே அசத்தலாக இருந்தது. ஒருவர் முகம் முழுவதும் வர்ணம் பூசிக்கொண்டு வந்தார். அவர் கூத்துப்பட்டறை மாணவர் தம்பிச்சோழன். அவரது கவிதை நிகழ்த்துதலென்ற வித்தியாசமான நிகழ்வுடன் கூட்டம் தொடங்கியது. பார்க்க உண்மையில் புதுமையாக இருந்தது. சி.மோகன் மற்றும் ரமேஷ் பிரேதனின் கவிதைகளை தம்பிச்சோழன் அற்புதமாக நிகழ்த்திக் காட்டினார். அதைத் தொடர்ந்து பேசிய தாரா கணேசன் "கவிதை வாசிப்பது ஒரு கலை. இதுபோன்ற கவிதை நிகழ்த்துதல் கவிதையின் வீரியத்தை இன்னும் மெருகேற்றி ரசிக்க வைக்கிறது. கவிதை வரிகளுக்கு புதுப்பரிமாணம் கிடைக்கிறது" என்றார்.

தொகுப்பைப் பற்றி முதலில் பேசிய யவனிகா ஸ்ரீராமின் பேச்சு மிக அருமையாக இருந்தது. நவீன உலகின் ஒவ்வொரு பொருளும் பாலியல் வடிவம் கொண்டிருக்கின்றன. பத்திரிகை செய்திகள், அட்டைப்படங்கள், ஏன் மின்சார வயர்கள், ஒரு பேருந்தின் சக்கரத்தைப் பார்க்கும்போது கூட பாலியல் இச்சைகள் கிளறப்படும் காலக்கட்டம் இது என்று குறிப்பிட்டார். விஜயமகேந்திரன் தனது கதைகளில் பெருநகர பாலியல் சிக்கல்களை எப்படி எதிர்நோக்குகிறார் என்று பேசினார். குறிப்பாக ஒரு நகரத்துக்கு வெளியே என்ற கதையில் ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண்கள் முடிவற்ற காமத்தின் சுழலில் மாட்டிக்கொண்டு உழல்வதைக் குறிப்பிட்டார். கவிஞர் ஐயப்பமாதவன் பேசுகையில், "நான் இதுவரை ஆறு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன். யாருக்கும் எனது பெயர் தெரியவில்லை. சிறுகதை எழுதும் முயற்சிக்கு வந்துவிட்டேன்" என்றார். விஜயமகேந்திரனது தொகுப்பில் நான் படித்த "இருத்தலின் விதிகள்" சிறுகதை நினைவுக்கு வந்தது. நான் எதிர்பார்த்தது போலவே ஐயப்பமாதவன் அந்த சிறுகதையைப் பற்றிதான் குறிப்பிட்டுப் பேசினார்.

அடுத்து பேச வந்த தாரா கணேசன் எழுதியெடுத்து வந்த விமர்சனக் கட்டுரையைக் கூட்டத்தில் வாசித்தார். ஓ.ஹென்றி கதைகளில் முடிவில் ஒரு ட்விஸ்ட் இருக்கும். பின்நவீன காலகட்டத்தில் இதுதான் வடிவமென்று எவ்வித நிர்ணயமும் அவசியமற்றுப்போன நிலையும் உருவாகிக்கொண்டிருக்கிறது. வாழ்வு நகரும் வேகத்திற்கு ஏற்ப சிந்தனையின் வடிவமும் மொழியின் வடிவமும் இலக்கியத்தின் வடிவமும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. ஒரு கதைக்குத் திட்டவட்டமான முடிவு இருந்தாக வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சிறுகதை இன்னொரு சிறுகதையின் ஆரம்பமாக இருக்கலாம். தொகுப்பிலுள்ள ‘மழை புயல் சின்னம்’ சிறுகதை மற்றும் ‘அடைபடும் காற்று’ சிறுகதைகள் பற்றி குறிப்பிட்டார். பின்னர் பேச வந்த ஆர்.அபிலாஷும் ’மழை புயல் சின்னம்’ கதையைச் சிலாகித்துக் குறிப்பிட்டார். ஆர்.அபிலாஷ் பேசும்போது மிகவும் பதற்றமாக இருந்தார். விஜயமகேந்திரனது சிறுகதையின் வெற்றியே அவரது கதைகளில் இரண்டு முரண்நிலை கதாபாத்திரங்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ளும் போக்கு என்று சொன்னவர் "ராமநேசன் எனது நண்பன்" கதையை உதாரணமாகக் குறிப்பிட்டார்.

விஜயமகேந்திரனின் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான விசயம், சிக்கலில்லாத அவரது மொழி நடை. கதைகளை வாசிக்கையில் ரயிலின் தடதடப்பு போன்று வேகமாகக் கடந்து சென்றுவிடுகிறது. சிலவிநாடிகள் அதிர்வுகளை மறக்காமல் விட்டுச்சென்றபடி. நகரத்து வாழ்வின் சிடுக்குகள் அவரது கதையெங்கும் விரவிக் கிடந்தாலும் அவரது மொழியில் எந்த சிக்கலும் இருப்பதில்லை. அநேகமாக கலந்து கொண்ட அனைத்துப் பங்கேற்பாளர்களும் இதை சுட்டிக் காட்டினார்கள். கூட்டத்தில் செல்வப்புவியரசன் சொன்னது போல விஜயமகேந்திரன் எழுத்து நடை வெகுஜன பத்திரிகைகளுக்கும் பொருந்துவது போலிருக்கிறது. அதேநேரம் அவரது கவனமும் செயல்பாடுகளும் சிறுபத்திரிகைகளை நோக்கியே இருக்கிறது. தொகுப்பிலுள்ள "நகரத்திற்கு வெளியே" கதை படிக்கும்போது எனக்கு ஏனோ ஜி.நாகராஜனின் கல்லூரி முதல்வர் நிர்மலா கதை மனதின் மூலையில் லேசாக வந்து சென்றது. பெருநகரப் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியிலான உளவியல் மோதல்களை எழுதுவது விஜயமகேந்திரனுக்கு அருமையாக வருகிறது. இதை விஜயமகேந்திரன் தொடரலாம். தொகுப்பிலுள்ள ‘ஊர்நலன்,’ ‘காதுகள் உள்ளவன் கேட்கக் கடவன்’ போன்ற சிறுகதைகளில் அவ்வளவாக லயிப்பு ஏற்படவில்லை.

வாசிப்பனுபவம் எல்லாருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கூட்டத்தில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள் அவரவர் ரசனை அடிப்படையில் அவரவருக்குப் பிடித்த சிறுகதையைக் குறிப்பிட்டு பேசினாலும், எல்லோரும் சிலாகித்துக் குறிப்பிட்ட ‘இருத்தலின் விதிகள்’, ஒரு எழுத்தாளருக்கு அல்லது ஒரு இலக்கிய வாசகருக்கு சமூகம் எந்தளவு மரியாதையைத் தருகிறது. சமூகத்தை விட்டு விடலாம். அவனது குடும்ப உறுப்பினர்களிடத்து எந்தளவு மரியாதை கிடைக்கிறது. இந்தக் கதையில் வரும் முகம் தெரியாத அந்தத் தீவிர இலக்கிய வாசகரின் முகம் எப்படியிருக்கும்? அவர் ஏன் இறந்திருப்பார்? இது தொகுப்பின் இன்னொரு அருமையான சிறுகதை. பன்னிரண்டு சிறுகதைகளை கொண்ட இத்தொகுப்பில் இரண்டு மூன்று சிறுகதைகளைத் தவிர மற்ற எல்லாமே அருமையாக வந்திருப்பதே இத்தொகுப்பின் வெற்றி. அநேகமாக விஜயமகேந்திரனது எல்லா கதைகளிலும் புறக்கணிப்பின் வலி இருக்கிறது. பெருநகரப் பரபரப்பில் முகம் தொலைத்த மனிதர்கள் சதாசர்வநேரமும் அந்த வலியை சுமந்தபடியே திரிகிறார்கள். வலியைச் சுமந்தபடியே வேலை செய்கிறார்கள். வலியை சுமந்தபடியே உண்கிறார்கள். வலியைச் சுமந்தபடியே புணர்கிறார்கள்.வலியைச் சுமந்தபடியே உறங்குகிறார்கள். வலியை சுமந்தபடியே செத்தும்போகிறார்கள்.


எல்லா இலக்கிய கூட்டங்களிலும் நடப்பது போலவே இங்கேயும் தம் அடிக்க எழுந்து சென்றபடியும், சென்றவர்கள் வந்தமர்ந்தபடியும் இருந்தார்கள். இருந்தாலும் பெரும்பாலும் கடைசிவரை அமர்ந்திருந்தார்கள்.பலரைக் கூட்டம் முடிந்து கடைக்குக் கீழே சாலையில் சந்தித்து உரையாட முடிந்தது. நேரமின்மையால் சிறுகதைத் தொகுப்பின் மீதான பார்வையாளர்களது கலந்துரையாடலை நடத்த முடியவில்லை. கூட்டம் முடிந்து எல்லாரும் கிளம்ப லேசாக மழை தூற ஆரம்பித்தது. ரம்யமான பெருநகர மழைச்சாரலில் நனைந்தபடி சைக்கிள்காரர்களும், பாதசாரிகளும், துப்பட்டாவைத், தலையில் போர்த்தியபடி ஸ்கூட்டி இளம் பெண்களும் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒருவொருவருக்குள்ளும் சில கதைகள் இருக்கலாம். பெருநகரம் இன்னும் எத்தனைக் கதைகளைத் தன்னுள்ளே வைத்துள்ளதென்று தெரியவில்லை. எல்லாம் தெரிந்தாற்போல மழை கொட்ட ஆரம்பித்தது.

நகரத்திற்கு வெளியே / விஜய்மகேந்திரன்
 விலை- ரூ . 50
 டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கிறது.

Wednesday, July 21, 2010

மறைந்த எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ் அவர்களின் 5-ம் ஆண்டு நினைவுக் கூட்டம்.


     அனைவரும் வருக!
      
     July 25 · 4:00pm to7:00pm



டிஸ்கவரி புக் பேலஸ், (பாண்டிச்சேரி இல்லம் அருகில்)
கே.கே. நகர்-மேற்கு.    
சென்னை - 78. தொடர்புக்கு: 9940446650

Thursday, July 15, 2010

-விமர்சனம் மற்றும் கலந்துரையாடல் கூட்டம்

 


18.07.2010 ஞாயிறு மாலை 5.30

டிஸ்கவரி புக் பேலஸ்,
(பாண்டிச்சேரி இல்லம் அருகில்)
கே.கே. நகர் மேற்கு, சென்னை - 78.

பங்கேற்பாளர்கள்

யவனிகா ஸ்ரீராம்
அய்யப்ப மாதவன்
ரமேஷ் பிரேதன்
தாரா கணேசன்
பொன்.வாசுதேவன்
ஆர்.அபிலாஷ்
பாக்கியம் சங்கர்

அனைவரும் வருக !

நிகழ்ச்சி ஏற்பாடு : அகநாழிகை

Wednesday, June 9, 2010

சொற்கப்பல் (விமர்சன தளம்) ஜூன் மாத சிறுபத்திரிக்கை அரங்கு














தமிழ் சிறுபத்திரிக்கை சூழல் குறித்த கருத்தரங்கு



நாள் : 12-06-2010 சனிக்கிழமை மாலை 4.00 முதல் 7.00 வரை
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் கே.கே.நகர் பாண்டிச்சேரி கெஸ்ட் அவுஸ் அருகே

வரவேற்புரை ; பால் நிலவன்.
சிறப்புரை:
தலைப்பு:
தற்கால இந்திய ஆங்கில நாவல்கள் மற்றும் அவற்றின் கதையாடல்கள்
மீனா கந்தசாமி
(பத்திரிக்கையாளர் மொழிபெயர்ப்பாளர் விமர்சகர் மற்றும் கவிஞர்)

பத்தாண்டுகளில் புது எழுத்தும் சிறுபத்திரிக்கை சூழலும்

உரை :
ஸ்ரீ நேசன்
செல்வ புவியரசன்
வெளி ரங்கராஜன்
லதாராமகிருஷ்ணன்
யாழன் ஆதி
தக்கை வெ: பாபு
சா. தேவதாஸ்,
யூமா வாசுகி

மற்றும்
மனோன்மணி
புது எழுத்து ஆசிரியர்

நன்றியுரை : மு.வேடியப்பன்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
அமுதரசன் பாலராஜ் மற்றும் க.முகுந்த்
அனைவரும் வருக !

................................................................................................................................................................................................................
சொற்கப்பல் (விமர்சன தளம்) அமைப்பாளர்கள்
அகநாழிகை - தடாகம்.காம் – டிஸ்கவரி புக் பேலஸ்

Saturday, May 29, 2010

காதலே...!


எப்படி என்று தெரியாது
 நான் கல்லாகிப் போனது.
அப்படியேதான் மரமாகிக் போனதும்.
முகம் வாடி பொலிவிழக்கும்போது
மலர் மலர்ந்து மட்டும்  மணக்கப்போவதில்லை.
நதிநீரின் அசைவை
 நான் அறிந்ததில்லை.
கதிரவனோ நிலவோ அது என்
வட்டத்திற்கு வெளியே
வந்து போகலாம்.
அப்படியென்றால்.....?
சொல்கிறேன் கேள்!
தூர தேசத்திலிருந்து உன்
வாசம் சுமந்து வரும்
காற்று என் தூதுவன்.
மரண ஓலமிட்டு தன்கிளை பிரியும்
சறுகுகள்தான்  என் தோழிகள்.
காலை எனது நம்பிக்கை.
மாலைதான் எனது எதிரி.
எப்படி சொல்வதென்று தெரியவில்லை.
விரைந்து வா காதலனே!
வீணாய் கழிகிறது காலம்.

Tuesday, May 11, 2010

நமது டிஸ்கவரியில் கிடைக்கும் புத்தகங்கள் பற்றிய படங்களும், குறிப்பும்

வாழ்பனுபவங்கள் கோடி. ஒவ்வொரு கணமும் அனுபவமே. வீட்டில் குழந்தைகள் வளரும்போது ஒவ்வொரு கணமும் பொற்கணமே. பார்க்க நமக்குக் கண்ணிருக்கவேண்டும். அனுபவங்களில் இருந்து தொடங்கி மேலும் சில தூரம் பறந்து காற்றில் எழுவதற்கான முயற்சிகள் இவை. "இந்நூலைத் தொடுபவன் என்னைத் தொடுகிறான்" என்றார் ஓர் எழுத்தாளர். இச்சிறு நூலைப் பற்றி அதைச் சொல்லத் துணிவேன்.
 * நூலாசிரியர்: ஜெயமோகன்
*Weight 140.00 gms  
* Pages 128
* Price: Rs. 80.00 ,          * தொடர்புக்கு:  +91  9940446650
  .................................................................................................



நாவல் என்றால் என்ன? கதை, சிறுகதை, நெடுங்கதை, நாவல் - இவற்றுக்கு இடையே என்ன வித்தியாசம்? தமிழில் எழுதப்பட்ட ‘நாவல்கள்’ என்று சொல்லப்படுபவை உண்மையிலேயே நாவல்கள்தானா? இதுபோன்ற கேள்விகளை எழுப்பும் ஜெயமோகன் அந்தக் கேள்விகளுக்கு, தெளிவான, தருக்கபூர்வமான பதில்களை நிறுவுகிறார்..ஒரு தேர்ந்த வாசகனது ரசனையை மேம்படுத்துவதில் இந்த நூல் வெற்றி அடைகிறது என்றே சொல்ல வேண்டும்.

நூலாசிரியர்: ஜெயமோகன்
* வகை: கட்டுரை
* Weight 160.00 gms
                                     * Pages 144
                                     * Price: Rs. 100.00,   * தொடர்புக்கு:   +91 9940446650
 ...........................................................................................................................




  ஆதாம், ஏவாள் காலம் முதல் மனிதனை சுழற்றியடிக்கும்  ஒரு   மந்திர சக்தி, காதல். காதல்தான் பல சாம்ராஜ்ஜியங்களை  அழித்திருக்கிறது. ஆனால் அதே காதல்தான் பல சாதாரண மனிதர்களை சாதனையாளராக உயர்த்துவதற்கும் தூண்டுகோலாக இருந்திருக்கிறது.இதன் ஒவ்வொரு அத்தியாயமும் காதலை வெற்றிகொள்ள ஒரு படிக்கல். இனி காதலும் காதலியும் உங்கள் உள்ளங்கையில்.
         * நூலாசிரியர்: ரிச்சர்ட் டெம்ப்ளர்
         * வகை-கட்டுரை
        * Weight 250.00 gms
         * Pages 229
         * Price: Rs. 150.00,   * தொடர்புக்கு:  +91 9940446650

                                    
 ....................................................................................................................................

 
 மூன்றுநாள் சொர்க்கம்
 * வகை- நாவல்
* Weight 108.00 gms
* Pages 72
* Price: Rs. 50.00           * தொடர்புக்கு: +91 9940446650



                                               

.............................................................................................................................................                                              
                                            மனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதைகள்
காட்டும் உலகம் நாம் பிறரிடம் இருந்து மறைத்துக்கொள்ள விரும்பும் நம்முடைய உலகமேதான். அதனால்தான் இது சஞ்சலப்படுத்துகிறது. நம் அந்தரங்கத்தை அவ்வளவு மிருதுவாகத் தொடுகிறது. அவமானத்தையும் வாதையையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதைச் சொல்லித் தருகிறது. ஒரு உளவாளியைப் போல நம் மறைவிடங்களைக் கண்காணிக்கிறது. 
                       வகை  :  கவிதை
                      விலை  :   ரூ-150
    தேவைக்கு தொடர்புகொள்ளவும்- +91 9940446650
........................................................................................................


சாரு நிவேதிதா கடந்த ஓராண்டில் சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் இவை. தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா எனப் பல்வேறு தளங்களில் இக்கட்டுரைகள் எழுதப் பட்டுள்ளன. மிகவும் பேசப்பட்ட பல படங்கள் பற்றிய உடனடியான விமர்சனங்களைப் பதிவு செய்து வந்திருக்கும் சாரு நிவேதிதா சினிமாவின் அழகியல் மற்றும் அவை முன் வைக்கும் மதிப்பீடுகள் குறித்து இக்கட்டுரைகளில் துல்லியமாக தன் பார்வைகளை முன்வைக்கிறார்.

                      வகை  : சினிமா கட்டுரைகள்
                      விலை  :   ரூ-75
   தேவைக்கு தொடர்புகொள்ளவும்- +91 9940446650
.................................................................................................................................................................

Monday, April 26, 2010

யுகமாயினியின் மூன்று புத்தகவெளியீட்டு புகைப்படங்கள்

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவின் “அதன் பேர் அழகு” -என்ற கவிதை குறித்த கட்டுரை தொகுப்பை திரு.அமுதபாரதி அவர்கள் வெளியிட, பெற்றுக்கொள்பவர் எழுத்தாளரும் பேராசிரியருமான  பாரதி அரிசங்கர். உடன் கவிஞர்.அரங்க மல்லிகா


எழுத்தாளர் திரு இந்திரா பார்த்தசாரதி அவர்களுடன் எஸ்.பொ. (வலது) இளநகை(இடது) மற்றும் பார்வையாளர்களின் ஒரு பகுதி






யுகமாயினி ஆசிரியரும் சித்தன்கலைக்கூடம் பதிப்பகத்தின் உரிமயாளருமான சித்தன் அவர்கள் உரையாற்றும்போது..


the whilwind- என்ற இலங்கையின் சமகால அரசியல் பேசும்  ஆங்கில நாவலை மித்ரா பதிப்பக உரிமையாளர் திரு. எஸ்போ அவர்கள் வெளியிட, கலை விமர்சகர் திரு.இந்திரன் அவர்கள் பெற்றுக்கொள்கிறார். நாவலின் ஆசிரியர் அயந்துரை சாந்தன்.  நடுவில் நிற்பவர் ஈழ கவிஞர்  இரா.எட்வின் அவர்கள்.
கனடா வாழ் ஈழ எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி அவைகள் எழுதிய சிறுகதை தொகுப்பை கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட,  எழுத்தாளர்கள் மதுமிதா மற்றும் அன்பாதவன் பெற்றுக்கொள்கிறார்கள்.



கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றுகிறார்.

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன,   தமிழின் மூத்த எழுத்தாளர் திரு இந்திரா பார்த்தசாரதி அவர்களுடன் நலம் விசாரித்தபோது. 



உங்கள் வருகைக்காக காத்துகிடக்கும் ஏராளமான சிறுபத்திரிக்கைகளுடன் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள்.

Tuesday, April 6, 2010

மூன்று நூல்கள் வெளியீடு

 
Posted by Picasa
வரும் 18-04-2010 அன்று நடைபெறும் மூன்று நூல் வெளியீட்டு விழாவிற்கு அனைவரையும் அழைக்கிறோம். மற்ற தவல்களுக்கு மேலே உள்ள படத்தை பார்க்கவும்

Monday, April 5, 2010

நூல் வெளியீட்டு விழா

அடுத்த திருவிழாவுக்கு தயாரகிறது டிஸ்கவரி புக் பேலஸ்

Friday, April 2, 2010

சொற்கப்பல் ; விமர்சன தளம் அன்புடன் அழைக்கிறது

discoverytamilbooks.blogspot.comஏப்ரல் நிகழ்வு


நாள்: சனிக்கிழமை மாலை 5.மணி 3/4/ 2010

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் , 6 மகாவீர் காம்பளக்ஸ் ,முனுசாமி சாலை பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில், கேகே.நகர் சென்னை 78
தொடர்பு எண் :9884060274, 9940446650
,


வரவேற்புரை :
பொன். வாசுதேவன்

சிறப்புரை :கூத்துப்பட்டறை ந.முத்துசாமி அவர்கள்.(என் கதை -என் நாடகம் -என் வாழ்க்கை)
நினைவரங்கம்: மறைந்த காஞ்சீபுரம் இலக்கியவட்டம் வெ.நாராயணன் அவர்கள்
விமர்சன அரங்கு- சமீபத்தில் வெளிவந்த நாண்கு கவிதை தொகுதிகள்
 

நூல்களும் ஆசிரியர்களும்                            விமர்சனம் செய்பவர்கள்
 

1.முயல்போல் வாழும் காமம்- நீலகண்டன்         கண்டராதித்தன்
2.வேட்கையின் நிறம்-உமாசக்தி                               நரன்
3.புவன இசை-வெயில்                                                    அய்யப்ப மாதவன்
4. தனிமயின் இசை-அய்யனார் விஸ்வநாத்,      நிலா ரசிகன்
 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : அகநாழிகை
மற்றும் அஜயன் பாலா / தடாகம்.காம் / டிஸ்கவரி புக் பேலஸ்



Monday, March 29, 2010

எழுத்தாளர்களுக்கு இனிய செய்தி

இன்று உலகம் முழுக்க கணினி –இணையம் என்று படைப்புகள் அனைத்தும் வேகமாக டிஜிட்டல் மொழியாக வளர்ந்துவரும் சூழலில், பொதுவாக அச்சு ஊடகமும், அவற்றை படிக்கும் வாசகர்களும் குறைந்துகொண்டே வருகிறார்கள் என்பதே உண்மை. அதே சமையம் புதிய படைப்பாளிகளின் வருகையும், அவர்களின் எழுத்தார்வமும் முன் எப்போதும் இருந்ததை விட வேகமாக பெருகிக்கொண்டேதான் இருக்கிறது.பொதுவாக நமக்கும் பேருந்து பயணதிலும், தனிமையான சூழல்களிலும் ஏன் எல்லா நிலையிலும்கூட புத்தகம்தான் படிப்பதற்கு வசதியாக உள்ளது. அதனால்தான் அச்சாக வெளிவரும் புத்தகங்கள் மீது இன்னும் கொஞ்சம் நம்பிக்கை மிச்சமிருகிறது. அந்த நம்பிக்கையே மூலதனமாக வைத்து, நல்ல படைப்புகளை அச்சேற்றி ஆவணப்படுத்தும் உயரிய நோக்கோடு நண்பர் செந்தில் “குரல் வெளியீடு” என்ற பெயரில் ஒரு பதிப்பகம் ஆரம்பித்துள்ளார். ஆர்வமுள்ள எழுத்தாளர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.


தொடர்புக்கு;
குரல் வெளியீடு
செந்தில்குமார்
9566049592
senthiljj1979@gmail.

Tuesday, March 9, 2010

டீ கடை அண்ணாச்சி

ஐந்தாறு வருடத்திற்கு முந்தைய என்னுடைய எல்லா நண்பர்களுக்குமே டீ கடை அண்ணாச்சியைத் தெரியும். அவர்களை ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் பேச்சுக்கிடையில் நான் ஒன்றை திரும்பத் திரும்ப சொல்லிவைப்பேன். “டீ கடை அண்ணாச்சிய எங்கேயாவது பாத்தா எனக்கு பேசச்சொல்லு, என் போன் நம்பரக் கொடு” -என்பதுதான்.
இந்த உதவியை நீங்களும்கூட செய்யலாம். திரைப்பட உதவி இயக்குனரான எனது வேளைகளுக்கிடையில் அடிக்கடி அண்ணாச்சியின் ஞாபகம் வரக் காரணம், நான் அவருக்கு தரவேண்டிய கடன் பற்றிய ஒரு குறிப்புதான். சரியாக இன்றுடன் நான்கு வருடம் பத்துமாதம் என்று நினைக்கிறேன். தொல்லாயிரத்து முப்பது ரூபாய் என்று அந்த தொகை பற்றி எனது நாட்குறிப்பில் குறிக்கப்பட்டுள்ளது.

அவரை என்றேனும் ஒருநாள் நிச்சையம் சந்திப்பேன் என்பதற்கு எனது நம்பிக்கையும் எதிர்பார்ப்புமே ஆதாரம். ஒரு வேளை நீங்கள் யாரேனும் அண்ணாச்சியைக் கண்டுபிடித்து கொடுக்க முன்வந்தால் மன்னிக்கவும். இதற்கு அது உங்களால் முடியாது என்று அர்த்தமல்ல, பழைய நகைசுவை நடிகர் சுருளிராஜனின் இளம் வயது தோற்றம்போல இருக்கும் அண்ணச்சியை யார்வேண்டுமானாலும் கண்டுபிடித்துவிடலாம்தான். ஆனால் உண்மையில் அவரை சென்ற வாரத்தில் நானே எதேச்சையாக இதே கோடம்பாக்கத்திலேயே சந்தித்து முகவரியையும் கொடுத்துவிட்டு வந்தேன். ஒரு கதைக்கான தொடக்கமே உங்களின் கவனத்தை ஈர்த்து தன்வயப்படுத்திவிடவேண்டும் என்ற சினிமா இலக்கணத்தில் சிக்கிக்கொண்டிருப்பதால் தொடங்கிய ஒரு தொடக்க ஆலாபனையே அன்றி வேரில்லை...


சரி.... முன்பே ஒன்றை சொல்லிவிடுகிறேன். நான்கு வருடத்திற்கு முந்தைய டீ கடை அண்ணாச்சியை பற்றிய கதை என்பது பயங்கர ஆச்சரியங்களும், திடீர் திருப்பங்களும் நிறைந்த ஒன்றல்ல. தெருவுக்கு நான்கு டீ கடை முளைத்துவிட்ட சென்னை நகரில், நான்கில் ஒரு கடை நொடிந்துபோவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அப்படி நொடிந்துபோனதுதான் அண்ணாச்சியின் டீ கடையும். அதுவும் கோடம்பாக்கம் வடபழனி போன்ற சினிமாக்காரர்கள் நிறைந்த பகுதிகளில் இது சகஜமாகக்கூட இருக்கலாம். அதேசமயம் டீ கடை வைத்து சம்பாதித்து ப்ளாட் வாங்கி பெரிய அளவில் வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறவர்களும் இருக்கிறார்கள் என்பதும் நிதர்சனமான உண்மை.

"ராம் தியேட்டர் எதிர்ல, கங்கையம்மன் கோவில் தெரு இருக்கு, அதுல நேரா வந்தா.. வலப்பக்கம் ஒரு மெடிக்கல் இருக்கும். அது பக்கத்தில புதுசா ஒரு டீ கடை. டீ கடைய ஒட்டி போற சந்தில திரும்பனா மூணாவது வீடு. பழைய நம்பர் பத்தொன்பது"- இதுதான் நண்பன் சொன்ன அவனது வீட்டு முகவரி. அவன் சொன்ன முகவரியில் வரும் புது டீ கடைதான் அண்ணாச்சியின் டீகடை. நண்பனை பார்க்கப்போகும் ஒவ்வொரு நாளும் என்னிடமிருந்து குறைந்தது ஐந்து ரூபாயையாவது அந்த டீ கடை குடிக்கத் தொடங்கியது.

அண்ணாசியின் டீ கடையில் ஒதுங்கும் எத்தனையோ பேர்களில் நானும் எனது சைக்கிளும், நண்பனும் தவிர்க்க முடியாதவர்கள். அவரும் கடைவைத்து சில நாட்கள்தான் ஆகிறது. எல்லோரையும் மனதில் வைத்துக்கொண்டு, ஆட்களைப் பார்த்ததும் அவர்களுக்கு தேவையானவற்றை புரிந்து, சரியான கலவையில் அரை தம்ளர் டீயும் கால் தம்ளர் நுரையுமாக முழுமனதோடு கொடுக்கும் முக்கா தம்ளர் டீயுடன் “சார்..’’ என்ற அழைப்பு ஒரு நொடி எல்லோரது கவனத்தையும் ஈர்த்துவிடும். “சார்’ என்ற ஒற்றை சொல்லுக்கு எங்களுக்குள் அங்கு ஏக கிராக்கி.

நான் டீ கடைக்கு போகத் தொடங்கிய ஒருவாரத்திற்கு பிறகும் அவரின் பெயர் என்ன எற்றுகூட தெரியாது. பலருக்கு மாஸ்டர், எங்களுக்கு அண்ணாச்சி. புதுக்கடை என்பதற்காக இல்லை, அவரின் இயல்பே யாரிடமும் முகம் சுழிக்காததுதான். தொழில் நுனுக்கம் என்றாலும் தப்பில்லை. புதுக்கடை என்பதால் நான் உட்பட அங்குவரும் இன்னும் சிலரும் தங்களுக்கு தெரிந்த உபதேசங்களை ஊதிவிட்டனர். இதை உபதேசங்கள் என்பதுகூட தவறுதான். ஒரு டீக்கடை என்றால் அதற்கான ஆடை அலங்காரங்களைப் போல பண்ணும்-வடையும்-பிஸ்கெட்டும்- பேப்பர் இத்யாதிகளும் அடங்கியதுதானே, நாங்கள் சொன்னதும் அண்ணாச்சி செய்ததும் அதையேதான்.

அண்ணாச்சி கடையில் பிறகு  வாழைபழம் கூட கிடைத்தது. புதிதாக ஒரு பையனும் வேலைக்கு சேர்ந்திருந்தான். தினசரி பத்திரிக்கைகளோடு மாலை பத்திரிக்கையும் கிடைத்தது. உபதேசம் இதோடு நின்றபாடில்லை. மாலையில் போண்டாவும் பஜ்ஜியும் போடச்சொன்னோம். இரண்டுமாத உபரியில்லாத அவரின் வியர்வை மீண்டும் முதலீடானது.


டீ கடையின் வாடிக்கையாளர்களில் பெரும்பான்மையினர் சினிமாவை சார்ந்தவர்களே. அனைவருமே தினம் ஐந்து ரூபாய் டீ கடை கணக்கில் செலவழிக்கும்படியான நிரந்தர நிகர வருமானமற்றவர்கள் என்பது அண்ணாச்சியும் அறிந்ததே. ஆனால் இவர்களின் யோசனைதான் டீக்கடை விரிவாக்கத்திற்கு உதவியதென்றால் தவறில்லை.

அண்ணாச்சியின் தொழில் விருத்திக்கு பிறகு அது ஒவ்வொருவர் பாக்கெட்டிலிருந்தும் குறைந்தது பத்து ரூபாயை எதிர்பாத்தது. இருந்தால்தானே.. அப்படியும் சில நாள் இருக்குமேயானால் அது அண்ணாச்சி தினந்தோறும் காலையில் படிக்கும் ராசிபலன்களின் அனுகூலமேயன்றி வேரில்லை.


புதியவர்களை வரவேற்பதும், அவர்களை வசியப்படுத்தும் ஒரு புன்னகையை உதிர்ப்பதும் அண்ணாச்சியின் தேவையாயின. முன்பே போடப்பட்ட பென்ச்டன் இரண்டு ப்ளாஸ்டிக் ஸ்டூலும் சேர்ந்துகொண்டன. போண்டா பஜ்ஜிக்கு சட்ணியும் சேர்ந்துகொண்டது கூடுதல் சிறப்பு என்று சொல்ல முடியாது, ஏனென்றால் சற்று தள்ளியுள்ள எல்லா கடைகளிலும் அவை தேவைக்கேற்ப கிடைத்தது.

நண்பனை சந்திப்பதற்கும், அவனை வீடுவரை விடுவதற்கும் என்ற எனது பயணத்தில் அண்ணாச்சி கடையின் புது இஞ்சி டீயும் சேர்ந்துகொண்டது. என் சார்பிலும்கூட சில புதிய வாடிக்கையாளர்கள் அங்கு வந்துபோனார்கள். கவனிக்கவும், இதுவரை எல்லாமே சாதாரனமாகவே நடந்துகொண்டிருக்கிறது.

டீ கடைக்கு ஆட்கள் அதிகமாக வரத்தொடங்கினர். அண்ணாச்சியும் தேவையற்ற பேச்சையும் சிரிப்பையும் குறைத்துக்கொண்டு வியாபாரத்தில் பரபரப்பானார். கொஞ்ச நாளாவே கல்லாப்பெட்டியின் இருப்பு அவருக்கு பெரும் நிறைவைத் தந்தன.

பிறகுதான் கவனித்தேன். இருவர் டீ குடித்துக்கொண்டே சினிமா கதை பேசினர். அண்ணாச்சி அவர்களை வியப்பாக பார்த்தார். அவர்களிடமிருந்து சில நாளில் நான்கு டீ- நான்கு சிகரெட் வாங்கியதிற்காக ஐந்நூறு ரூபாய் நோட்டாக வரும். அவர் திக்குமுக்காடிப்போவார். பக்கத்து கடைகளுக்குபோய் சில்லறை மாற்றிக்கொண்டு ஓடி வருவார். அவர் திருப்பிக்கொடுக்கும் சில்லறையை ஒரு கையில் டீ தம்ளரை பிடித்தபடி, வாயிலும் மூக்கிலும் புகையை ஊதிக்கொண்டே.. இடக்கையால் பணத்தை வாங்கி எண்ணிகூட பார்க்காமல் அப்படியே பாக்கெட்டில் போட்டுக்கொள்வார்கள். இது அவர்களின் வெட்டி பந்தா என்று புரிந்து கொள்ளவேண்டிய அவசியம்  அண்ணாச்சிக்கு அப்போதில்லை.

பொதுவாக சிகரெட் பிடிப்பவர்களில் சிலர், சூழலுக்கு சற்றும் தொடர்பில்லாத விசயத்தைப் பேசுகிறார்கள், அல்லது பேச்சுக்கிடையில் என்றோ நின்றுவிட்ட பழைய விசயத்தை கிண்டுகிறார்கள். அருகில் சிகரெட் பழக்கமற்றவர்கள் இருக்கக்கூடும் என்ற கவனமற்று, காற்றுவாக்கில் அவர்கள் முகத்தில் புகையை ஊதிவிட்டு எரிச்சலூட்டுகிறார்கள். சிகரெட் பிடிப்பவர்கள் பற்றிய அண்ணாச்சியின் கண்டுபிடிப்புதான் இவையெல்லாம். ஆனாலும் “சார் சிகரெட்..?” –என்ற அண்ணாச்சியின் கேள்வியில் ஒரு வசீகரம் தொணிக்கும். வேறு வழியில்லை, வேறு வழியில்லை என்பது சில நேரம் பணமில்லை என்பதையும் குறிக்கும். கடைசியாக காளியான சிகரெட் அட்டையில் எனக்கான கடன் பதியும். அதில் சரிபாதியாய் அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்திருப்பது நண்பனுக்கானதும், அல்லது அவன் எனக்கு வாங்கிக்கொடுத்தாலும் அவை என் கணக்கிலேயே பற்றுவைக்கப்பட்டு இறுதியில் நானே கட்டித்தொலைக்க வேண்டியதும்.

சினிமாக்காரர்களின் வரவும் நெருக்கமும் கூடக்கூட அண்ணாச்சியின் கற்பனை சிறகு முளைக்கத் தொடங்கியது, அந்த சிறகு ஒரு திடகாத்திரமான ரெக்கையாக மாறியபின் பறத்தல் மற்றும் பறத்தல் நிமித்தமாக சில நேரம் வேலையை மறந்து பிரம்மையாக நின்றுவிடுவார். இந்த இடைவெளியில் அவர் திரையரங்குகளின் கூரைகள் மீது தாவித்தாவி அமர்ந்து ஒரு குட்டித் தூக்கம் போட்டு விழித்திருப்பார். அந்த கனனேர தூக்கத்தினூடாக திரையரங்கின் வெண் திரையில் தோண்றி டீ ஆற்றுவதாகவும், திரையின் கீழ் விளிம்பிலிருந்து மேல் விளிம்புவரை தான் ஆற்றும் டீயின் ஓடுபாதை சர்ர்ர்ரென்று ஓடி, அடுத்த ஷாட்டில் தம்ளரில் நிரம்புவதாகவும், அந்த டீயை எடுத்து ஹீரோ குடிப்பதாகவும் ஒரு கனவுபோல உருபோட்டுக்கொள்வார். சில நேரம் இதையே மாற்றி யோசிப்பார். டீ குடித்துவிட்டு காசு கொடுக்காமல் போகும் ஒரு வில்லனின் முகத்தில் சூடான டீயை ஊற்றி, கடையிலிருந்தே எகிறிச் சுழன்று வில்லனின் முகத்தில் உதைக்க, அவன் தப்பித்து ஓடிவிடுவான்.

ஒரு டீ கடையை மையமாக வைத்து இதைத்தவிர வேறெதுவும் யோசிக்க முடியாத அளவு அண்ணாச்சியும் சரி, தமிழ் சினிமாவும் சரி வளர்ச்சியடையாத சூழலில் அவரின் இந்த கற்பனை தவிர்க்க முடியாததாகிவிட்டது. பல வருஷம் சினிமாவில் வேலை செய்த பிறகு ஒரு இயக்குனர் யோசிப்பதை சிலனொடி கேப்பில் அண்ணாச்சியாலும் யோசிக்க முடிகிறதென்றால்.. பார்த்துக்கொள்ளுங்கள். அதோடு டீ குடித்துவிட்டு கதைபேசும் சிலர் “நம்ம அண்ணாச்சி மாதிரி ஒரு கேரக்டர்...”- என்று அவரையே உதாரணத்துக்கு இழுத்ததும்கூட அவருக்கு சிறகு முளைக்கும் காரணிகளாகின.

என்னுடையது போலவே, மற்றவர்களுடைய கடனும் காலியாகும் சிகரெட் அட்டையை நிரப்பிக்கொண்டு மீண்டும் பணக்கட்டுகளைப்போல உள்ளேயே பதுங்கிவிடும். ஒரு நாள் இரவு கடன் அட்டைகள் மொத்தத்தையும் எண்ணிப்பார்த்த அண்ணாச்சிக்கு தூக்கிவாரிப்போட்டது. மொத்தம் எழாயிரத்தை தாண்டியது. அதன் பிறகு அவருக்கு தூக்கம் பிடிக்கவில்லை. எப்படியாவது யாருக்கும் நோகாமல் கடனை வசூலித்துவிட வேண்டும் என்ற திட்ட்த்தோடு மறுநாள் கடயைத் திறந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில்தான் அண்ணாச்சிக்கு ஒரு சந்தோஷமான செய்தியை நண்பன் ஒருவன் சொன்னான். சினிமாக்காரர்களின் அதிக பழக்கமும், அவர்களுக்கு சக்திக்குமீறி விட்ட கடனுக்குமாக சேர்த்து ஒரு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தேவிட்டது. அதுவும் வியாபாரதுக்கு இடையில் அவர் கண்ட அதே பகல் கனவுபோலவே,  டீ மாஸ்டராகவே நடிக்கும் வாய்ப்பு. இங்கு செய்வதையே அங்கும் செய்துவிட்டால் போதும் என்பதால் ஒத்திகை எதுவும் பார்க்கும் சிரமத்தை தவிர்த்த கூடுதல் சந்தோஷம் வேறு அண்ணாச்சியை ஜென்மபலன் அடைந்த நினைப்பில் மிதக்க வைத்தது.

இதனால் இனி யாருக்கும் கடன் இல்லை என்ற அண்ணாச்சியின் உறுதியான தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் பழையமுறையே அமுலானது. சினிமாவில் அவருக்கு நடிப்பு வாய்ப்பு கிடைத்தது என்பது, சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட சரியான வாய்ப்பு. அதாவது “உடுக்கை இழந்தவன் கைபோல”_என்ற திருக்குறளுக்கு இணையான உதவி. அதனால் நண்பனுக்கு ஒரு சபாஷ்!

படப்பிடிப்பிற்கு முதல் நாள் இரவு எல்லோருக்கும் அண்ணாச்சி ஒரு விருந்து கொடுத்தார். விருந்தில் கலந்துகொண்ட அனைவருமே அவரின் கடன் அட்டைதாரர்கள் என்று சொல்ல முடியாது. சிலர் எதிர்காலத்தில்தான் அந்த கணக்கில் சேருவார்கள்.

 
படப்பிடிபிற்கு அண்ணாச்சி ஆட்டோவில் வந்திரங்கினார். பரபரப்பாக நடந்த படப்பிடிப்பிற்க்கு இடையில் அண்ணாச்சியின் காட்சி படமாக்குவதற்கான நேரம் வந்தது. பாரம்பரியமான ஸ்டுடியோவின் பிரமாண்டத்தையும், செயற்கையாக அமைக்கப்பட்டிருந்த கடைவீதியையும் பார்த்த பிரமிப்பிலிருந்து திடுக்கிட்டு விடுபட்ட அண்ணாச்சி நொடிப்பொழுதில் தயாரானார்.

அதே டீ ஆற்றும் வேலைதான் என்றாலும் ஒரே ஆறுதல்- பெரிய ஆறுதல் டீ குடிக்கும் பெண்தான். நகரத்து நவநாகரிக யுவதி, இதுவரை அவரது டீ கடையில்கூட அப்படியொரு பெண் டீ குடித்ததாக அவருக்கு ஞாபகம் இல்லை. ஆனால் சினிமாவில் மட்டும் எப்படி...?  நண்பனிடம் கேட்டேவிட்டார். நண்பனும் “அதுதான் சினிமா, தோசைய திண்ணு.. ஓட்டைய எண்ணாத..”- என்று ஒரு செம பஞ்ச் கொடுத்தார்.

அண்ணாச்சி அதற்குமேல் எதுவும் பேசவில்லை. டீ குடிக்கும் பெண் அணிந்திருந்த பனியனுக்கு வெளியே அவளது மார்பகங்கள் புடைத்துத் தெரிந்தன. அல்லது அவளது மார்பகங்களுக்கு ஏற்ற பனியனை அவள் போட்டுக்கொள்ளவில்லை. இரண்டும் ஒன்றுதான் என்கிறீர்களா?  சரி.. விடுங்கள், நானும் சினிமாக்காரன்தானே...!

இந்த இடத்தில் எந்த நாகரிகமும் எடுபடாது என்பதை புரிந்துகொண்ட அண்ணாச்சி, இந்த வாய்ப்பை பயன்படுத்தி கூடுமானவரை பெண்ணின் அழகையாவது ரசித்துவிடவேண்டும் என்று தீர்மானித்தார். படத்தின் இயக்குநர் கேமரா-ஸ்டார்ட் சொல்லி கட் சொல்லும்போது அந்த பெண் டீக்கான காசை நீட்டவேண்டும். இயக்குனர் கட் சொன்னபிறகு காசை வாங்கிய அண்ணாச்சி அதை தவறவிட்டார். காசை எடுக்க குணிந்த பெண்ணின் மார்பை பார்த்து பரவசமடைந்தார்.

இதை எப்படியோ பார்த்துவிட்ட ஒரு உதவி இயக்குனர் இயக்குனரிடம் வத்தி வைக்க, “இது நல்லாருக்கே... இப்படியே செஞ்சிடலாமே...”- என்று அந்த வாய்ப்பு அண்ணாச்சிக்கு ஐந்துமுறை நீட்டிக்கப்பட்டது. ஒருவேளை இதை “இதுதான் கமர்சியல் இயக்குநரின் சமயோசிதம்”- என்று எதிர்காலத்தில் திரைப்பட ஆய்வாளர்கள் கருத்து சொன்னால் அதற்கு நான் பொறுப்பல்ல!. ஒருவழியாக டேக் ஒகேயானதும் நண்பனுக்கு நன்றி சொன்ன அண்ணாச்சி அதன் பிறகு சொன்னதுதான் வேடிக்கையானது. “அந்த பொண்ணு என்ன ஒரு மாதிரி பாத்திச்சி. என்ன அதுக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சி...” என்றார். அதுசரி..!

இந்த சம்பவத்திற்கு பிறகு அண்ணாச்சியிடம் மாற்றம் தெரிந்தது. சிலர் அவர் நடித்த படத்தின் பெயரையே அவருக்கு அடைமொழியாக்கி அழைத்தனர். சினிமாவைச் சேர்ந்தவர்களின் வரிசையான படையெடுப்பால் தனது கடை கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து சிதைந்து கொண்டிருப்பதை அறியாத அண்ணாச்சி, லாங் சாட்.. க்லோஸ் அப்.. என்று பேசி சிரிப்பது மற்றொரு வேடிக்கையானது. இந்த வார்த்தைகள் அவரை உயரத்தில் தூக்கி வைத்து பேயாட்டம் போடவைத்தது. அதேசமையம் எந்தக் கவலையுமில்லாமல் கதை பேசுபவர்களின் குரல்கள் மட்டும் காற்றில் மோதி போண்டா வாசணையில் கரைந்துகொண்டிருந்தது. சில நாளில் வரும் ஐநூறு ரூபாய் நோட்டுக்காரர்களிடம் காசு வாங்குவதை தவிர்த்த அண்ணாச்சி, அதற்கு பதிலாக அவர்களிடம் நடிப்பு வாய்ப்பு கேட்க்கவும் தயங்கமாட்டார்.

இப்போதெல்லாம் யாரிடமும் அண்ணாச்சி கடனை உறுதியாக திருப்பி கேட்பதில்லை. அப்படியும் மீறி கேட்டால் சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக சொல்லி பேச்சை மாற்றுவார்கள். அதனால் யார் வந்தாலும் “இவ்ளோ கடன் வரவேண்டியிருக்கு..”- சிரித்தபடியே சிகரெட் அட்டைகளை எடுத்துக்காட்டுவார். அவர்களும் “நம்ம பணத்தபத்தி கவலப்படாதிங்க அண்ணாச்சி, ஆனா எல்லோர்கிட்டையும் இப்படியே விட்டுடாதிங்க..” என்று சொல்வார்கள். கடனை சூசகமாக கேட்ட திருப்தி அண்ணாச்சிக்கும், அதனை புத்திசாலித்தனமாக மலுப்பிவிட்ட திருப்தி கடன்காரர்களுக்கும் என பார்வை முகத்தை பார்க்காமல் பலகாரங்கள் மீதே வழியும்.

நீண்ட யோசனைக்கு பிறகுதான் கடைப்பையனை நிருத்தினார். ஒரு வாரம் அவராகவே சமாலித்துப்பார்த்தார்.தோது வருவதாக இல்லை. புதிய ஆட்கள் வருவதும் குறையத் தொடங்கின. ஆனாலும் அங்கு சினிமாக்காரர்களின் வருகை குறைந்தபடில்லை. அண்ணாச்சிக்கு தெரியும். போண்டா பஜ்ஜி போடுவதை நிறுத்தினாலே இவர்களை நிருத்திவிடலாம் என்று, ஆனால் முடியாது. கடன்காரர்களை கடைக்கு வரவழைக்க இந்த பலகாரஙகள்தான் ஒரே வழி.

அளவுக்கு மீறி அரட்டையடிப்பதையும், அரை நாளைகூட சிலர் கடைவாசலிலேயே கழிப்பதையும் பார்க்கப் பார்க்க அவருக்கு கெட்ட சகுனமாக பட்டது. அதுவும் கொஞ்ச நாளாக புதுப்பட நாயகர்களைப்போல ஒருவர் நடித்துக்காட்ட, மற்றவர்கள் கைத்தட்டி ரசிக்க என்று டீ கடை பொழுது போக்கவும், அரட்டையடிக்கவும் என்று மாறிவிட்டது. நீங்களே சொல்லுங்கள், கழுதைகள் எவ்வளவுதான் குதூகலமாக இருந்தாலும் குட்டிச்சுவர் என்பது ஒரு குடும்பம் சிதைந்து போனதின் சுவடுதானே..?. டீ கடையும் அப்படியே.
கடைசியில் போண்டா பஜ்ஜி போடுவதையும் நிருத்திவிட்டார். எப்படிப் பார்த்தாலும் அந்த டீ கடையில் கடைசிவரையிலும் பொழிவு மாறாமல் இருந்ததென்றால் அது சிகரெட் பிடிப்பவர்களுக்காக எரிந்து கொண்டிருக்கும் சிறு விளக்குதான்.


சரி... அதன் பிறகு?. 

அதன் பிறகு ஒன்றுமில்லை. நான் வேலை செய்யும் படத்தின் வெளிப்புறப் படப்பிடிபிற்காக கிட்டத்தட்ட ஒருமாத காலம் மூணாறு, கொடைக்கானல் என கழிந்தன. அதன் பிறகும் அங்கிருந்து ஊருக்கு சென்று ஒருவாரம். அண்ணாச்சிக்கு தரவேண்டிய எனது கடன் தொகையான தொல்லாயிரத்து முப்பது ரூபாயோடு சென்னையில் இரங்கினேன். கடனை திருப்பிக் கொடுத்தவுடன் குடிக்கும் முதல் டீயிலேயே அடுத்த கணக்கை ஆரம்பித்துவிட வேண்டும் என்ற முடிவோடுதான் அண்ணாச்சி கடைக்கு போனேன். 

அந்த இடத்தில் ஒரு பெட்டிக்கடை முளைத்திருந்தது. ஒரு கணம் எதிர்பார்க்காத அதிர்ச்சியாய் இருந்தாலும், மறுகாணமே “இது எதிர்பார்த்த அதிர்ச்சிதாண்டா மொக்க..”- என்று என் மனமே என் மண்டைமீது சுத்தியலை கொண்டு அடித்து ஞாபகப்படுத்தியது.
நண்பன்தான் சொன்னான். கடைசி நாளான அன்று டீ தம்ளர்களையும், பாய்லரையும் பழைய பொருட்களுக்கான கடையில் போட்டிருக்கிறார். கடன் அட்டைகளை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, ஸ்டூல்களையும் சில பொருட்களையும் பக்கத்து கடையில் விற்றிருக்கிறார். “கவலைப்படாதீங்க அண்ணாச்சி, நீங்க நடிச்ச படம் தீபவளிக்கு ரிலீஸாகிடும். உங்களுக்கு நிறைய வாய்ப்பு கிடைக்கும்”- என்ற நண்பனின் சமாதானம் எடுபடவில்லை. “என் கடன் எப்போ வரும்” என்று திரும்பத் திரும்ப கேட்டு புலம்பியிருக்கிறார். நண்பனால் எதுவும் பேச முடியவில்லை.

அன்று முழுதும் காலியான கடைவாசலிலேயே நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்திருக்கிறார். அப்போதும் நண்பன்தான் ஓடிப்போய் டீயும் பண்ணும் (மற்றொரு கடையில் வைக்கப்பட்ட கடனாக இருக்கலாம்) வாங்கிவந்து சாப்பிடவைத்து அனுப்பி இருக்கிறான்.

எங்கு சென்றிருப்பார்?, யாருக்கு தெரியும். எல்லோரையும்போல ஊருக்கு போயிருக்கலாம். நானும் அப்படிதான் நினைத்திருதேன்.

 
“சார்...!”


சென்ற வாரம் கோடம்பாக்கத்தில் பார்த்ததாக சொன்னேனே, அப்போது கேட்ட குரல். பழக்கப்பட்ட அதே அண்ணாச்சியின் குரல். சென்னையில்-கோடம்பாக்கத்தில் எப்படி?.
ஆச்சரியமா இருக்கு?- நானும்  விடாமல் சமாளித்தேன்.
“நான் இங்கதான் சார் இருக்கேன், உங்களத்தான் பாக்க முடியல...” இருவரும் ஒருனொடி உற்று பார்த்துக்கொண்டோம். மனக்கிளி வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கடன் அட்டைகளை கொத்திப்புரட்டி, இறுதியில் தொள்ளாயிரத்து முப்பது ரூபாய் என்றிருந்த எனது அட்டையை எங்கள் இருவருக்கும் இடையில் தூக்கிப்போட்டது.
நான் வெளிப்படையாகவே பேசிவிட நினைத்தேன். ஆனால் இப்போதே  “இந்தா.. பிடி”-என்று கடனை எடுத்து நீட்டிவிட முடியாத சூழல், இந்த ஆண்டும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. “அப்போ நாளைக்கு முடியுமா?”-எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். முடியாது. அடுத்த வாரம்? முடியும். இதைத்தான் நான் நினைத்ததும்-அவரிடம் சொல்ல முயற்சித்ததும். அண்ணாச்சி எதையும் காதில் வாங்கும் தன்மையில் இல்லை.

ஆரம்பத்திலிருந்தே கவணித்தேன். ஆண்ணாச்சியின் கையில் பத்திரமாக மடித்து பாதுகாக்கப்பட்ட ஒரு காகிதப்பையை கைகளில் மாற்றி மாற்றி பிடித்துக்கொண்டிருந்தார். நான் கவனிப்பதை உணர்ந்ததும் சட்டென பையிலிருந்து ஒரு புகைப்பட தொகுப்பை எடுத்து நீட்டினார். புரிந்துவிட்டது. அண்ணாச்சியின் விதவிதமான புகைப்படங்கள். ஒவ்வொரு புகைபடத்தின் பின்னாலும் அவரின் முகவரிவும், போன் நம்பரும் எழுதியிருந்தது.

நான் அவரிடம் எதையும் அதிகமாக அங்கு விசாரிக்காமல் என் முகவரியை கொடுத்தேன். கண்டிப்பாக அடுத்த வாரம் வரும்படியும், அப்போது அவருக்கான கடனை கொடுத்துவிடுவதாகவும் சொன்னேன்.
“காசு வேணாம் சார்.... எனக்கு நல்ல வாய்ப்பு குடுத்தா போதும் சார்”- என்றார். அவர் உறுதியாக சொன்னார். நானும் உறுதியளித்தேன். இன்று மட்டும் இதுபோல் இன்னும் சிலருக்கு இப்படி உறுதியளித்திருக்கிறேன்.

Friday, March 5, 2010

சொற்கப்பல் ; விமர்சன தளம் அன்புடன் அழைக்கிறது

நாள்: சனிக்கிழமை மாலை 4.மணி 6. 3 2010

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் , 6 மகாவீர் காம்பளக்ஸ் ,முனுசாமி சாலை பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில், கேகே.நகர் சென்னை 78
தொடர்பு எண் :9884060274, 9940446650
,


வரவேற்புரை :
பொன். வாசுதேவன்

சொற்கப்பல் ; ஒரு அறிமுகம் :
அஜயன்பாலா

விளக்கு பரிசு பெற்ற விக்கிரமாதித்யன் அவர்களுக்கு
சொற்கப்பல் சார்பாக பொன்னாடை போர்த்துதல்
முகுந்த் மற்றும் வேடியப்பன்

வாழ்த்துரை: விக்கிரமாதித்யன் நம்பி


நூல் விமர்சனம் :இரண்டு சிறுகதைத்தொகுப்புகள்

நூல் :1 அமிர்தம் சூர்யாவின் கடவுளை க்கண்டுபிடிப்பவன்

விமர்சகர்கள் ;
வே. எழிலரசு
பஞ்சாட்சரம் செல்வராஜ்

நூல் : 2 சந்திராவின் காட்டின் பெருங்கனவு

விமர்சகர்கள் ;
அசதா
காலபைரவன்

நன்றியுரை ;
வேடியப்பன்



தமிழ்மகன் >அகநாழிகை> தடாகம்.காம்>மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ்

Thursday, February 25, 2010

லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்

விமர்சனம்

புத்தகத்த படிச்சதும் உடம்புபூராவும் ஒரு உற்சாகம் ஜில்லுன்னு ஏறுது, ஏதோ திருவிழாகூட்ட்தில ``அந்தப்பக்கம் தனியாவா’’-ன்னு ஜாடைகாட்டிட்டு கூட்டத்தோட கூட்டமா மறைஞ்சிபோன அத்தைபொண்ண கோயில்மாடுமதிரி தெனவெடுத்து தேடுவமே... அப்படியொரு நினப்பு மனசுபூறா நிக்குது. அரகுற ஆடையோட நம்மள சுத்தி பத்து பதினஞ்சு மாடர்ன் பொண்ணுங்க விசிறி வீசுறாங்கலோன்னு நினைச்சு நம்மள நாம்மளே கிள்ளிபாத்துக்க தோனுது. முத்தம் கதை ஆரம்பிச்சதிலிருந்து முடியரவரைக்கும் கில்லி கிளைமாக்ஸ் மாதிரி ஓடுது... அந்தப்பெண்ணின் நிலையும் எதிர்பார்ப்பும் ஞாயமானதே.. லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும் பத்தி என்னால் ஒன்னும் சொல்ல முடியல, ஏன்னா எதை எதல கலக்கனாங்க, எதை குடிச்சாங்கனு சரியாபுரியல, எனக்கு அந்த அனுபவம் கம்மி. அதே சமையம் அந்த கதைல உற்சாகம் ஏற- ஆட ஆரம்பிக்க- வாசிக்க- பாட்டு முடிய- என்று சினிமா டிஸ்கிரிப்சன் மாதிரியும் இருக்கு. என்னை பிடிக்கலையா? கதையில் எல்லாம் முடிஞ்சபிறகு ஹவுஸ் ஓனர் பொண்டாட்டி’என்னை- என் மனச-என் உணர்வை மதிக்கிற ஒருத்தனோட படுத்தது....’- என்று பேசற அந்த டயலாக் ரொம்ப பிடிச்சிருக்கு. அது உல்லாசதில் ஏற்பட்ட திருப்தில வர உண்மையான வார்தை. ஆண்டாள்,தரிசனம், மாம்பழ வாசணை, நண்டு, போன்ற கதைகள் முற்றிலும் விளையாட்டுத்தனம் அற்ற அக்கறையான எழுத்தாளனின் கதைக்களம். துரை.. நான்.. ரமேஷ் கதை சுவாரஷ்யமானது. 1காதல் 2க்ளைமாக்ஸ் கதை நல்ல டுஸ்ட். நல்ல கமர்சியல், எதிர்காலத்தில சினிமாவுக்கு பயன்படுத்தலாம், காமம்கொல் அற்புதமான தோலுரிக்கும் வேலை, வாழ்த்துக்கள். மற்ற கதைகளும் ஒவ்வொரு வகையில் என்னை கவர்ந்திருந்தாலும் டைப்பிங் பிரச்சனையால் அதிகமாக எழுதமுடியவில்லை. நேரில் கதைகளை பற்றி நிறையபேசலாம் என்று நினைக்கிறேன்.

Sunday, February 21, 2010

அழைப்பு..

நமது டிஸ்கவரி புக் பேல்ஸ்-ன் அடுத்த நிகழ்வாக இன்று 23-2-10
மாலை 5.30 மணிக்கு கலைவிமர்சகர் இந்திரன் அவர்களின் தலைமையில்
ஒரிய கவிஞர்களுடன் ஓர் உரையாடல்-என்ற தலைப்பில் ஒரிய கவிஞர்களுடன்
இலக்கியம் சார்ந்த சந்திப்பு நடைபெற உள்ளது. அனைவரும் வருக!

தொடர்புக்கு;டிஸ்கவரி புக் பேலஸ்
எண்-6. மஹாவீர் காம்ளக்ஸ்
முனுசாமி சாலை
கே.கே.நகர் மேற்கு
சென்னை-78
call.9940446650

இதனால் சகல பதிவர்களுக்கும் சொல்வது என்னவென்றால்.....

மதிபிற்குறிய பதிவர்களே, சமீபத்தில்
நண்பர் திரு.கேபிள்சங்கர் மற்றும் பரிசல் கிருஸ்ணா ஆகியோரின்
சிறுகதை தொகுப்புகளை நாகரத்னா பதிப்பகம் சென்ற 14-ம் தேதி சென்னை கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ்சில் வைத்து வெளியிட்ட்து அனைவரும் அறிந்ததே....! தற்போது நாகரத்னா பதிபகத்தின் மற்ற வெளியீடுகளையும் சேர்த்து அனைத்து புத்தகங்களையும் 10% முதல் 20% வரை கழிவுடன் விற்பனைக்கு வைத்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெறிவித்துக்கொள்கிரோம்

தொடர்புக்கு ,
டிஸ்கவரி புக் பேலஸ்
நம்பர் 6, மகாவீர் காம்ளக்ஸ்,முனுசாமி சாலை
மேற்கு கே.கே.நகர். (பாண்டிச்சேரி இல்லம் அருகில்)
அழைக்க;9940446650

Tuesday, February 16, 2010

விருப்பம்

சென்ற 14 ம் தேதி கேபிள் சங்கர் மற்றும் பரிசல் கிருஷ்ணா ஆகியோரின் நூல் வெளியீட்டுவிழா சிறப்பாக நடந்து முடிந்ததை அனைத்து பதிவாளர்களும்அறிவோம். சிறப்பு விருந்தினர்களே ஆச்சரியப்படும் அளவு பதிவாள்ர்கள் மிகவும் உற்சாகமிகுதியுடன் இருந்தனர். எனது விருப்பம் இந்த உற்சாகத்தை ஒன்று சேர்க்கவேண்டும் என்பதே. அதாவது, அனைத்து பதிவாளர்ளையும்ஒன்று சேர்த்துஅவர்களின் அனைத்து படைப்புகளையும் அச்சுஆவனமாக மாற்றி ஒரு பாதுகாப்பு அரணை உருவாக்கி ஒன்றினைத்து செயல்பட்டால் இன்னும் பல சாதனைகளை செய்யமுடியும். இதை நமது பதிவர்கள் யாரேனும் செய்ய முன்வந்தால் அதர்க்கான இடத்தையும் தேவைப்படும் மற்ற உதவிகளையும்கூட டிஸ்கவரி புக் பேலஸ் சார்பாக செய்துதர தயாராக உள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன், நன்றி.....

Thursday, February 11, 2010

இன்னொரு சபதம்

இனி ஒருபோதும் உன்னை தொடப்போவதில்லை.

நீ இருக்கும் பக்கம் தலைவைத்தும் படுக்கப்போவதில்லை.

எனக்குள் இற்ங்கி என்னை

முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டது

இனி ஒருமுறை வேண்டாம்.

இரவெல்லாம் உன்னை தூக்கி சுமந்த வலி

விடியலில் வேண்டவே வேண்டாம்.

இசைக்காத உனது மகுடியில் மயங்கி

மாலைதோரும் கைகள் நடுங்கியபடி வரப்போவதில்லை.

உன் பசப்பு மயக்கம் இனி செல்லாது.

நாம் முயங்கிப் பிரிந்த பின்

நமது மிச்சங்களை

வாசணை பாக்குகளால் கூட மறைக்க முடிவதில்லை.

ஒன்று சொல்கிறேன் கேட்டுக்கொள்.....

இதையே எனது கடைசிக் கடிதமாக ஏற்றுக்கொள்வாய்

என்று நம்புகிறேன். இல்லையென்றால்

இதுவே உனக்கு எச்சரிக்கையாகட்டும்.

திருவிழா காலங்களில் ஊர் சாவடியிலோ...

திருமண வீட்டின் மொட்டை மாடியிலோ...அல்லது

விஷேசமற்ற காரணங்களுக்கு கூட

ஒன்று கூடிவிடும் நான்கு நண்பர்கள் மத்தியிலோ

உன்னை எதேச்சையாக சந்திக்க கூடும்... அப்போது,

`ஒரே ஒருமுறை மட்டும்’` இதுவே கடைசி முத்தம்’- என்று

மீண்டும் ஒரு ஆரம்பத்திற்கு மட்டும்

வித்திடாமல் இருந்தால் போதும். மற்றபடி

உன்னை விரும்பி-தேடி

வரப்போவதில்லை எனும் அளவிற்கு

மன உறுதிமிக்கவன் நான்